சுஷாந்தின் மரணத்துக்கு நீதி வேண்டும் - மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி வேதனை
“உண்மையே ஒரு பொருட்டல்ல என்றால், வேறு எதுவும் எப்போதும் எதையும் செய்யாது” என்று வேதனையுடன் கருத்து பதிவிட்டுள்ளார் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங் கிர்தி. இவர் சில நாட்களுக்கு முன்பு அனைவரிடமிருந்தும் என் சகோதரனை காக்க முடியாமல் போய்விட்டது என்றும் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.
பாலிவுட்டின் பிரபல இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பின்னால் உள்ள காரணங்களை கண்டறிந்து நீதி வழங்க வேண்டும் என்று சுஷாந்தின் தந்தை, சகோதரி மற்றும் பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சுஷாந்த் சிங்குடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகையான ரியா சக்ரபார்டிதான், என் மகனின் தற்கொலைக்கு காரணம் என்று சுஷாந்தின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக வழக்கும் பதிவாகியுள்ளது. அதுபோலவே நடிகை ரியா சக்ரபார்டியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ள தனது டிவிட்டர் பதிவில் “ சுஷாந்த் தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும். அப்போதுதான் அவர் ஏன் தற்கொலை முடிவினை எடுத்தார் என்ற காரணங்கள் வெளிவரும்” என்று தெரிவித்துள்ளார்.