“Censor Board-ல் ஊழல் நடந்திருக்கா!”- விஷாலின் ஷாக் புகாரும், மத்திய அமைச்சகத்தின் சூடான ரிப்ளையும்!

சென்சார் போர்டில் லஞ்சம் கேக்குறாங்க, எதாவது பண்ணுங்க மோடிஜி என நடிகர் விஷால் எக்ஸ் வலைதளம் மூலம் புகார் எழுப்பியிருந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Vishal
VishalPT

நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியான மார்க் ஆண்டனி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், படத்தின் இந்தி வெளியீட்டுக்காக தணிக்கை குழு தரப்பிற்கு ரூ.6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை நடிகர் விஷால் முன்வைத்துள்ளார். பணப் பரிவர்த்தனைக்கான தகவல்களையும் தன்னுடைய ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

எனது கடின உழைப்பால் கிடைத்த பணம் ஊழலுக்காக கொடுக்கப்பட்டுள்ளது!

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "சினிமாவில் ஊழல் காட்டப்படலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் கூடாது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் ஊழல் கூடாது. மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிடுவதற்காக திரைப்பட தணிக்கை குழு 6.5 லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்றுள்ளது. படத்தை பார்ப்பதற்கு ரூ. 3 லட்சமும், தணிக்கை சான்றுக்கு 3.5 லட்சமும் லஞ்சம் பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு அணுகியதால், வேறு வழி இல்லாமல் பணத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது

vishal
vishal

எனது கடின உழைப்பால் கிடைத்த பணம் ஊழலுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. இந்த விவகாரத்தை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்.

இனி இதுபோன்ற விஷயங்கள் எந்த தயாரிப்பாளருக்கும் நடக்கக்கூடாது” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விசாரணை நடத்த மூத்த அதிகாரி மும்பை அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்! - மத்திய அரசு நடவடிக்கை

நடிகர் விஷால் முன்வைத்த புகாரை தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தகவலில், “சென்சார் போர்டில் ஊழல் நடந்திருக்கிறது என நடிகர் விஷால் முன்வைத்த குற்றச்சாட்டு மிகவும் துரதிருஷ்டவசமானது. அரசு ஒருபோதும் ஊழலை பொறுத்துக் கொள்ளாது, இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து விசாரணை நடத்த தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி இன்று மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார்” என்று தெரிவித்திருக்கிறது.

மேலும் ”சென்சார் போர்டில் வேறு ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால் அது குறித்து புகாரளிக்க jsfilms.inb@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்துமாறும்” தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com