”இந்தியன்-2 படத்தை அக்டோபருக்குள் முடித்து தர முயற்சிக்கிறேன்” - இயக்குநர் ஷங்கர்

”இந்தியன்-2 படத்தை அக்டோபருக்குள் முடித்து தர முயற்சிக்கிறேன்” - இயக்குநர் ஷங்கர்
”இந்தியன்-2 படத்தை அக்டோபருக்குள் முடித்து தர முயற்சிக்கிறேன்” - இயக்குநர் ஷங்கர்

லைகா நிறுவனமும் ஷங்கரும் கலந்துபேசி இந்தியன் 2 படப்பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியன் - 2 படத்தை முடித்துக்கொடுக்காமல் பிற நிறுவனங்களுடன் ஷங்கர் பணியாற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான இயக்குநர் ஷங்கர், “ஜூலை மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ஃப்ரீயாக இருப்பதால், இந்தியன் 2 படத்தை அக்டோபருக்குள் முடித்து தர முயற்சிக்கிறேன். நடிகர் விவேக் மறைவால் வேறு நடிகரை வைத்து காட்சிகள் எடுக்க வேண்டி உள்ளது.” என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “ நீதிமன்ற உத்தரவால் இந்தியன்-2 படப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. லைகா,ஷங்கர் கலந்து பேசி படப்பிரச்னைக்கு சுமூக தீர்வு காணுங்கள்" என அறிவுறுத்தி உள்ளனர்.

முன்னதாக, நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்த லைகா நிறுவனம் ‘இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவன படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

லைகா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், “ படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு ஆகியுள்ளது. இருப்பினும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருக்கிறது. ஆகையால் அவர் மீதமுள்ள படத்தின் பணிகளை அவர் முடித்து தர வேண்டும். இயக்குனர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருந்த நிலையில், தற்போது வரை 14 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயாராக இருக்கிறோம்”என்று குறிப்பிட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, “ இயக்குனர் ஷங்கரின் விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆகையால் ஷங்கர் பிற நிறுவன படங்களை இயக்கக் கூடாது என்ற தடையை விதிக்க இயலாது .இந்த வழக்கு குறித்து இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து லைகா நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறான கருத்தை கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com