கேரள பாதிப்பால் மனமுடைந்தேன்: ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதியுதவி!
வெள்ளப் பாதிப்ப்பில் இருந்து கேரள மாநிலம் விரைவில் மீண்டு வர, ராகவேந்திரரிடம் வேண்டுவதாக கூறியுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்குகிறார்.
கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம் காரணமாக கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இழப்பை சரிசெய்ய ரூ.2,500 கோடி ஆகும் என அரசு மதிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால், விக்ரம் உட்பட பல நடிகர், நடிகைகள் நிதியுதவி அளித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். வரும் சனிக்கிழமை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்துக்கு இந்த தொகையை வழங்க இருக்கிறார்.
இதுபற்றி ட்விட்டரில், ‘வெள்ளப்பாதிப்பு காரணமாக கேரளா சிதைந்திருப்பது கண்டு மனமுடைந்தேன். என் சகோதர, சகோதரிகள் வெள்ளத் தால் பாதிக்கப்படுவது வருத்தத்தை அளிக்கிறது. நான் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று உதவ நினைத்தேன். அப்போது மழை அதிகமாக இருந்ததால் போக வேண்டாம் என்று சொன்னார்கள். இப்போது மழை நின்றுவிட்டது. இதுதான் சரியான நேரம். சனிக்கிழமை கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கிறேன். அவரிடம் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை வழங்குகிறேன். அரசுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று உதவி செய்ய இருக்கிறேன். பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீண்டெழுவதற்கு ராகவேந்திரர் சாமியிடம் வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்..