ஹீரோ முகமும் கிடையாது.. தகுதியும் இல்ல.. யோகிபாபு வேதனை
ஹீரோ முகமும் அதற்கு தகுதியும் தனக்கு கிடையாது என தெரிவித்துள்ள யோகிபாபு, கடைசி வரை காமெடியனாகத் தான் நடிப்பேன் என கூறியுள்ளார்.
காமெடி நடிகர் யோகிபாபு வெளியிட்டுள்ள வீடியோவில் “எல்லோருக்கும் வணக்கம். நான் யோகி பாபு பேசுகிறேன். கடந்த சில நாட்களாகவே ‘நான் ஹீரோவாகத் தான் நடிப்பேன். காமெடியனாக நடிக்க மாட்டேன்’ என சிலர் போட்டுக் கொண்டிருக்கின்றனர். நான் ஹீரோலாம் இல்ல. ஹீரோ பண்ணும் அளவிற்கு இது முகமும் கிடையாது. தகுதியும் கிடையாது. தயாரிப்பாளரை நஷ்டப்படுத்தி விடக் கூடாது அல்லவா..? வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன்.
‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சாம் ஆண்டன் என்னிடம் ஒரு கதையை சொன்னார். ஒரு நாய் மற்றும் வெளிநாட்டுக்காரர் இதனை வைத்துதான் அந்த கதை. அவர்கள் வழிமாறி வந்து என்னிடம் மாட்டிக் கொள்கின்றனர். நார்மலா எப்போதும் போல காமெடி கேரக்டரில் தான் இப்படத்திலும் நடிக்கிறேன். மெயின் லீடு அந்த வெளிநாட்டு பெண்மணி மற்றும் நாய் தான். நான் ஒரு கூர்க்கா கேரக்டரில் நடிக்கிறேன். அவ்வளவுதான்.
ஏற்கெனவே ஒருசில இயக்குநர்கள் என்னை ஹீரோவாக்க அணுகினார்கள். நான் மறுத்தேன். இப்போது அவர்களெல்லாம் நாங்கள் சொல்லி நீங்கள் பண்ணவில்லை என்ற அளவிற்கு நினைக்கிறார்கள். சத்தியமாக சொல்கிறேன். இது ஹீரோ முகம்லாம் இல்லங்க. அதேபோல இயக்குநர் பாலாஜி மோகன் படத்திலும் லீடு ரோல் வேறு. ஆனால் நான் காமெடி கேரக்டரில் தான் நடிக்கிறேன். யார் என்ன சொன்னாலும் நம்பாதீங்க. நான் கடைசி வரை காமெடி தான் பண்ணுவேன். காமெடியனாவே என்னை பாருங்க” என தெரிவித்துள்ளார்.

