”பியானோ கற்றேன்.. 20 மணிநேரம் புத்தகம் படித்தேன்” - மிஷ்கின் ஊரடங்கு அனுபவம்
ஊரடங்கு நாட்களில் தான் 20 மணி நேரம் புத்தகங்களுக்காகச் செலவிட்டேன் என்றும் , இந்தப் பெரும் விபத்திலிருந்து திரை உலகம் விரைவில் மீண்டெழும் என்றும் இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.
ஊரடங்கு குறித்தும் திரைத்துறை குறித்தும் பேசிய அவர் “ கொரோனாவால் உலகமே இன்று அதிர்ந்து போயிருக்கிறது. ஆனால் நமது வாழ்க்கை எங்கேயும் நிற்கவில்லை. ஊரடங்கு நாட்களில் நாங்கள் எங்கள் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கிறோம். நமது பிரதிபலிப்புதான் கதைகள். மொழியினுடைய முக்கியமே கதைகள்தான்.
எனக்கு நம்பிக்கை இருக்கிறது. திரைத்துறை நிச்சயமாக மீண்டெழும். நாங்கள் நிச்சயமாக நல்ல கதைகளைத் தருவோம். இந்த ஊரடங்கு நாட்களில் இயக்குநர்கள் நிறைய விஷயங்களை கற்றுள்ளார்கள். அவர்கள் நிச்சயம் உங்களுக்கு நல்ல கதைகளை வெளிப்படுத்துவார்கள். நாங்கள் மட்டுமல்ல; இந்தச் சமயத்தில் ஒவ்வொரு சாமானியனிடமும் ஒரு கதை இருக்கும். இந்த அனுபவங்கள் நிச்சயமாக நல்ல கதைகளாக உருவெடுக்கும். ஆமாம் பொருளாதாரம் கடுமையாகச் சரிவடைந்துள்ளது. ஆனால் திரைத்துறை நமது வாழ்வோடு சம்பந்தப்பட்டது. அது நிச்சயம் ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
மேலும் பேசிய மிஷ்கின், “ ஊரடங்கு நாட்களில் நான் ஒரு நாளைக்கு 20 மணிநேரம் புத்தகங்களுக்காகச் செலவிட்டேன். அதேபோலே நானே பியானோ கற்கவும் பழகியிருக்கிறேன். என்று கூறினார்.