மும்பை ஜுஹு கடற்கரையில் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்திய பாலிவுட் நடிகை தியா மிஸ்ராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் தியா மிஸ்ரா. பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் தற்போது முமபையில் வசித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு திரையுலகில் இருந்து விலகி இருந்த தியா, சஞ்சய்தத் வாழ்க்கை வரலாறு படத்தில் மீண்டும் நடித்து வருகிறார். 2000ம் ஆண்டு மிஸ் ஆசியா பசிபிக் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பின் மும்பை ஜுகு கடற்கரைக்கு காலை ஐந்து மணிக்கு நடைபயிற்சி மேற்கொண்ட அவர் திடீரென அங்கு நீரில் மிதந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது மும்பை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதுகுறித்து தியா மிஸ்ரா கூறுகையில், ‘விநாயகர் சதுர்த்திக்கு பிறகு நானூறு டன் குப்பைகள் ஜுகு கடற்கரையில் தேங்கி விட்டது. இந்தக் குப்பையை அகற்றுவதில் 1200 இளைஞர்கள் ஈடுபட்டனர். அவர்களுடன் நானும் ஈடுபட்டேன். விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அதே வேளை கடற்கரையை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நமது கடமை’எனத் தெரிவித்துள்ள தியா, குப்பை அகற்றும் போது எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.