திருமண மோசடி வழக்கு | தொழிலதிபர் கொடுத்த புகார்.. விசாரணைக்கு ஆஜராகாத சின்னத்திரை நடிகை!
போரூர் அடுத்த கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜ்கண்ணன், தொழிலதிபரான இவர் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் சின்னத்திரை நடிகை ரெகானா பேகத்தின் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னிடம் திருமண மோசடி செய்து ரூ.20 லட்சம் வரை பணம், நகைகளை பெற்று ஏமாற்றியதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் இருவரையும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து ராஜ் கண்ணன் தனது வக்கீல்களுடன் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஆஜரான நிலையில், தன்னிடம் இருந்த ஆவணங்கள் மோசடி செய்த மனைவியுடன் செல்போனில் பேசிய உரையாடல் ஆகியவற்றை போலீசாரிடம் காண்பித்தார்.
ஆனால் கணவர் ஆஜரான நிலையில் சின்னத்திரை நடிகை ரெகானா பேகம் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
ஆஜராகாத சின்னத்திரை நடிகர்..
திருமண மோசடி செய்த மனைவி ரெகானா பேகம் வராதநிலையில், இந்தபுகார் தொடர்பாக நீதிமன்றத்தை நாடி நடவடிக்கை எடுத்துக் கொள்வதாக ராஜ் கண்ணன் எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய கணவர் ராஜ்கண்ணன், அளித்த பேட்டியில் தன்னை திருமணம் செய்து ரெகானா பேகம் மோசடி செய்ததாகவும், திருமணம் முடிந்த கையோடு தன்னை இது போன்று அச்சுறுத்தி, மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் என்னை மட்டுமல்லாது கோவையிலும் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரிடமும் நிலம் மற்றும் கார் ஆகியவற்றை ஏமாற்றியிருப்பதாகவும் தெரிவித்த அவர், ரெகானா பேகத்தின் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும், விரைவில் நீதிமன்றத்தை நாடி இதற்கு ஒரு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.