நடிகர் அக்ஷய்குமார் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்த ரசிகர் கைது செய்யப்பட்டார்.
பிரபல இந்தி திரைப்பட ஹீரோ அக்ஷய்குமார். இவர் தமிழில், சமீபத்தில் வெளியான ’2.0’ படத்தில் நடித்திருந்தார். இவரது பங்களா மும்பையில் உள்ள ஜுஹூ பகுதியில் உள்ளது. இங்கு செவ்வாய்க் கிழமை அங்கித் கோஸ்வாமி (வயது 20) என்ற வாலிபர் வந்தார். இவர் ஹரியானா, சோனிபேட்டில் உள்ள தட்டவ்லி என்ற ஊரைச் சேர்ந்தவர்.
பங்களா வாசலில் இருந்த பாதுகாவலர்களிடம், தான் அக்ஷய்குமாரின் தீவிர ரசிகர் என்றும் அவரை பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரை உள்ளே விட மறுத்துவிட்டனர் பாதுகாவலர்கள். பின்னர் இரவு முழுவதும் எங்கேயோ சுற்றுவிட்டு வந்த அங்கித், அதிகாலை 2 மணியளவில் பாதுகாவலர்களுக் குத் தெரியாமல் பங்களாவின் சுவரில் ஏறிவிட்டார். அப்போது நடிகர் அக்ஷய்குமார் பங்களாவில்தான் இருந்தார்.
அங்கித் சுவரில் ஏறிய பகுதி, கார் நிறுத்தும் இடம். இதை பாதுகாவலர் ஒருவர் எதேச்சையாகப் பார்த்து, அவரை மடக்கிப் பிடித்தார். இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ஜூஹூ போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, ‘’கூகுளில் தேடி, அக்ஷய்குமாரின் வீட்டு முகவரியை கண்டுபிடித்த அங்கித், அவரைப் பார்ப்பதற்காக இங்கு வந்துள்ளார். அவர் அக்ஷயின் ரசிகர். அவருக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதனால் அவரை சந்திக்க வந்துள்ளார். வேறு நோக்கம் அவருக்கு ஏதும் இல்லை’’ என்று தெரிவித்தனர்.