“ஜனநாயகன் படத்துக்காக 2 முறை அழுதேன்..” இயக்குநர் ஹெச்.வினோத் வேதனை!
படம் லீக் ஆன செய்தி இயக்குநர் ஹெச். வினோத்துக்கு கடும் மனவேதனையை ஏற்படுத்தி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருமுறை அழ வைக்கும் அளவுக்கு பாதித்தது. ஆறுதல் சொல்ல வந்தவர்களின் வார்த்தைகள் கூட வலியை அதிகரித்தபோது, விஜய் ஃபோன் செய்து வருத்தப்பட வேண்டாம் என உறுதியளித்தது அவருக்கு பெரிய ஆதரவாக இருந்தது. பெண்கள் முன்னேற்றம், நாட்டின் பயம், ஜனநாயக பாதுகாப்பு இணையும் கதையாக ‘ஜனநாயகன்’ உருவாகியுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `ஜனநாயகன்'. இப்படம் ஜூலை 23ம் தேதியான நாளை வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்திற்கான முன்பதிவு அதிகப்படியாக செய்யப்பட்டுவருகிறது. படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆனாலும், விஜயின் ரசிகர்கள் படத்தை திரையரங்கில் மட்டுமே பார்க்க வேண்டும் என காத்திருப்பது முன்பதிவு அதிகப்படியாக நடப்பதை பார்த்தால் தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்நிலையில் ஜனநாயகன் படம் தொடர்பாக பல்வேறு பேட்டிகளில் கலந்துகொண்டு பேசிவருகிறார் இயக்குநர் ஹெச்.வினோத். அதில் படம் லீக்கானது குறித்தும், அப்போது தன்னுடைய மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் தளபதி வெற்றிக் கொண்டான், ஜனநாயகன் போன்ற பெயர்களை தேர்வுசெய்தது குறித்தும் விளக்கியுள்ளார்.
ஜனநாயகன் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் ஹெச்.வினோத், “விஜய் சாருக்கு பெண்களின் முன்னேற்றம் குறித்த ஆர்வம் அதிகம். அவரின் தங்கை இறந்த பின்பு இருந்தே பெண் பாதுகாப்பு, அவர்கள் தைரியமாக இருப்பது போன்ற விஷயங்களில் அக்கறை அதிகம். அஜித் சாரும் அதே நோக்கத்தில் `நேர்கொண்ட பார்வை' படம் செய்தார். விஜய் சார் `பிகில்' செய்தார். இப்போது சிங்கப்பெண் படை வரைக்கும் அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சார் படங்களின் ஹை கான்ஃபிளிக்ட் படங்கள் மிக குறைவு. அப்படியான படமாக இது இருக்கும். பகசவந்த் கேசரி படம் ஜனநாயகனின் முதல் பாதியில் 60 சதவீதமும், இரண்டாம் பாதியில் 20 சதவீதமும் இருக்கும். மற்றபடி ஒரு பெண்ணின் பயத்தையும், நாட்டின் பயத்தையும் சேர்த்து சரி செய்வது தான் கதை.
ஸ்க்ரிப்ட் எழுதி முடித்ததுமே `ஜனநாயகன்' என்ற தலைப்பை முடிவு செய்துவிட்டேன். ஜனநாயகத்தை காப்பாற்றும் நாயகன், மக்களின் நாயகன் என இரண்டு பொருளும் படத்தின் கதைக்கு பொருத்தமாக இருந்தது. உடனே அனைவரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். `நாளைய தீர்ப்பு' என்ற பெயரையும் பரிசீலனையில் வைத்தார்கள். முதல் பட தலைப்பே கடைசி படத்துக்கும் இருக்கட்டும் என்றார்கள். ஆனால் ஜனநாயகன் என்பது அவருக்கு ஒரு பிராண்டாக மாறும் என இதையே வைத்துவிட்டோம். விஜய் சார் கதாபாத்திரத்துக்கு தளபதி வெற்றி கொண்டான் எனப் பெயர் வைத்தது ஸ்க்ரிப்ட் எழுதும் முன்பு நடந்த விவாதத்தில் முடிவு செய்தோம். பகவந்த் கேசரியை எப்படி எல்லாம் விஜய் சாருக்கு தகுந்த வகையில் மாற்றுவது என யோசித்தோம்” என பேசியுள்ளார்.
மேலும் படம் வெளியானபோது ஒரு இயக்குநராக என்ன மாதிரியான மனநிலை இருந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்தப் படத்தின் வெளியீட்டில் நடந்த பிரச்சனைகளை நினைத்து என் வாழ்வில் நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு முறை அழுதேன். படம் லீக் ஆகிவிட்டது என தெரிந்த பின்னர் உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்ற ஒரு நிலை, அதை எதிர்கொள்வது கடினமாக இருந்தது. படம் லீக் செய்யப்பட்டது குறித்து பலரும் ஆறுதல் சொல்லும் போது அந்த வலி இன்னும் அதிகரித்தது. அந்த சூழலை கையாள முடியாமல் தவித்த எனக்கு விஜய் சார் ஃபோன் செய்து எதற்கும் வருத்தப்படாதீங்கனு ஆறுதல் சொன்னார். அவரிடம் உள்ள சிறந்த பண்பாக அதை பார்க்கிறேன், அவருக்கு தான் படம் லீக்கானதில் பெரிய வேதனை. ஆனால் அந்தநிலையில் படக்குழுவில் வேறு யாருக்கெல்லாம் மனவேதனை இருக்கும் என தெரிந்துகொண்டு அவர்களுடன் உரையாடுவது சிறந்த பண்பாக பார்க்கிறேன். அவரால் தான் கொஞ்சம் வேதனை குறைந்தது, விஜய் சார் இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்று தோன்றியது” என தன்னுடைய வேதனையை பகிர்ந்துள்ளார்.

