“இயக்குநர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்” - அரசு தரப்பு வாதம்
அரசையோ அரசின் திட்டங்களையோ விமர்சிக்க மாட்டேன் என முருகதாஸ் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் ‘சர்கார்’. இந்தப் படம் வெளியாக இருந்த நிலையில் கதை திருட்டு உள்ளிட்ட பல சர்ச்சைகளை சந்தித்தது.
அதையும் மீறி தீபாவளி அன்று வெளியாகி வசூலை அள்ளியது. மேலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதில் அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு எரிப்பது, வில்லி கதாப்பாத்திரத்திற்கு கோமளவள்ளி என்று பெயர் சூட்டியது உள்ளிட்ட சில காட்சிகள் சர்ச்சைக்கு உள்ளாகியது.
இதையடுத்து அதிமுகவினர் ‘சர்கார்’ படத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். தமிழகம் முழுவது சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி போராட்டம் வெடித்தது. இதனால் அனைத்து திரையரங்குகளிலும் இந்தத் திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சர்ச்சைகுரிய காட்சிகளை நீக்கம் செய்ய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஒப்புதல் அளித்து காட்சிகள் நீக்கப்பட்டு படம் திரையிடப்பட்டது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் கோரி இயக்குநர் முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 9 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் அரசு தரப்புக்கு பதிலளிக்க கோரி வழக்கை ஒத்திவைத்தது. இதையடுத்து இன்று நீதிமன்றத்தில் பதிலளித்த தமிழக அரசு, அரசையோ அரசின் திட்டங்களையோ விமர்சிக்க மாட்டேன் என முருகதாஸ் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அரசை விமர்சித்ததற்காக முருகதாஸ் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.