’என் வாழ்வின் அழகான படைப்பு நீதான்...’ நடிகை ஃபிரீடா பின்டோ நிச்சயதார்த்தம்!

’என் வாழ்வின் அழகான படைப்பு நீதான்...’ நடிகை ஃபிரீடா பின்டோ நிச்சயதார்த்தம்!
’என் வாழ்வின் அழகான படைப்பு நீதான்...’ நடிகை ஃபிரீடா பின்டோ நிச்சயதார்த்தம்!

பிரபல நடிகை ஃபிரீடா பின்டோவுக்கு தனது காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தனது காதலரை, ’தனது வாழ்க்கைக்குள் வந்த அழகான படைப்பு நீங்கள்தான்’ என்று தெரிவித்துள்ளார்.

டேனி பாய்ல் இயக்கிய ’ஸ்லம்டாக் மில்லினர்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்பையைச் சேர்ந்த ஃபிரீடா பின்டோ. இந்தப் படத்தை அடுத்து மிரால், கேர்ள் ரைசிங், இம்மார்டல்ஸ், டெசர்ட் டான்சர், மோக்லி: லெஜண்ட் ஆப் த ஜங்கிள்’, ’நீடில் இன் எ டைம்ஸ்டேக்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தார். ஆங்கில தொலைக்காட்சித் தொடரிலும் நடித்து வருகிறார்.

இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் ரோஹன் அன்டோ என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவரை பிரிந்த ஃபீரிடா, ’ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் நடித்த தேவ் படேலை காதலித்து வந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் அவர், சாகசப் புகைப்படக் கலைஞரான கோரி டிரான் ( Cory Tran ) என்பவரை காதலித்து வந்தார்.

 இருவரும் விழாக்களுக்கு ஒன்றாகச் சென்று வந்தனர். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை பார்க்கச் சென்ற இவர்கள், ஸ்டேடியத்தில் முத்தமிட்டுக் கொண்ட காட்சிகள் பரபரப்பானது.

ஃபிரீடாவுடன் நடித்த ஹாலிவுட் நடிகர் ஆரோன் பாலின் நண்பர்தான், கோரி டிரான். அவர்தான் கோரியை, ஃபிரீடாவுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். முதலில் நட்பாக பழகிய இவர்கள், பின்னர் காதலில் விழுந்தனர். இந்நிலையில் 34 வயதான ஃபிரீடாவும் கோரி டிரானும் இந்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

திருமண மோதிரம் தெரியுமாறு, காதலரை அணைத்தபடி சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கும் ஃபிரீடா பின்டா, ‘இப்போது எல்லாம், அர்த்தமுள்ளதாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். 

அவர் மேலும், ‘’வாழ்க்கை, இந்த உலகம், கடந்த கால கண்ணீரும் வேதனைகளும் இப்போது அர்த்தமுள்ளதாக இருக்கின்றன. அன்பைப் பற்றி புத்திசாலித்தனமான முன்னாள் காதலர்கள் சொன்னவை அர்த்தமுள்ளதாக இருக்கிறது. நான் எங்கே இருக்கிறேன் என்பதும் எங்கே பயணிக்க வேண்டும் என்பதும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 

நீ என் அன்புக்குரியவன். என் வாழ்க்கைக்குள் நுழைந்த மிகவும் அழகான படைப்பு நீதான். இனி நீ இங்கேதான் தங்கப் போகிறாய். நான்தான் உன்னைத் தங்க வைக்கிறேன். என் மனப்பூர்வமான காத லுடன்...’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com