“யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றது” - கலைப்புலி எஸ்.தாணு

“யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றது” - கலைப்புலி எஸ்.தாணு
“யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றது” - கலைப்புலி எஸ்.தாணு

சினிமா டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி குறைப்பு யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றது என திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு விமர்சித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் நேற்று காலை டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டு தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவித்தனர். தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்கள் மீதான வரியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. 100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 28 %ல் இருந்து 18%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 12%ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இதில் 28% உள்ள பொருட்கள் 12% ஆகவும் சில பொருட்கள் 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது”என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதற்கு ஃபெப்சி அமைப்பு அரசுக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் நன்றி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சினிமா டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி குறைப்பு குறித்து திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு விமர்சித்துள்ளார்.

வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் அவர் அளித்த பேட்டியில், “சினிமா டிக்கெட்டுக்கான ஜி.எஸ்.டி குறைப்பு என்பது யானை பசிக்கு சோளப் பொறி மாரிதான் உள்ளது. மொத்தத்தையும் அகற்றினால் தான் சினிமா நல்லா இருக்கும், தலைக்கும். அதோடு மட்டும் இல்லாமல் இன்றைக்கு இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுக்கும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு ஜி.எஸ்.டி தான் காரணம் இதை அறவே அகற்ற வேண்டும். அக இருள் அகற்றி அறிவொளி வீச வேண்டும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com