‘புஷ்பா 3’-ம் பாகமும் வெளிவருகிறது - ரசிகர்களுக்கு ஃபகத் ஃபாசில் கொடுத்த அப்டேட்

‘புஷ்பா 3’-ம் பாகமும் வெளிவருகிறது - ரசிகர்களுக்கு ஃபகத் ஃபாசில் கொடுத்த அப்டேட்
‘புஷ்பா 3’-ம் பாகமும் வெளிவருகிறது - ரசிகர்களுக்கு ஃபகத் ஃபாசில் கொடுத்த அப்டேட்

‘புஷ்பா’ படத்தின் 3-ம் பாகமும் வெளிவர உள்ளதாக பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் பேட்டி ஒன்றில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றப் படம் ‘புஷ்பா : தி ரைஸ்’. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ஃபகத் ஃபாசில் போலீஸ் அதிகாரியாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் சேஷாசலம் மலைப்பகுதியில் வளரும், செம்மரக் கட்டைகளை கடத்தப்படுவதை மையமாக வைத்து இந்தக் கதை உருவாகி இருந்தது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தில், பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்தப் படத்தின் ‘ஊ சொல்றியா’, ‘ஸ்ரீவள்ளி’ பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனின் மேனரிசங்கள் மற்றும் புஷ்பான பிளவர்னு நினைச்சியா, ஃபயருடா போன்ற வசனங்கள் பிரபலமாகின.

கிரிக்கெட், சினிமா பிரபலங்கள் தங்களது சமூகவலைத்தளங்களில் அல்லு அர்ஜூனின் ஸ்டைலை இமிடேட் செய்து வீடியோ வெளியிட்டும் வந்தனர். குறிப்பாக இந்தப் படம் பாலிவுட் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து, வசூலிலும் எதிர்பார்த்ததை விட சாதனை புரிந்தது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘புஷ்பா - 2’ படம் 350 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளது.

அடுத்த ஆண்டு இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதால், விரைவில் படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளது. முதல் பாகத்தில் ஃபகத் ஃபாசில் கடைசி சில நிமிடங்களே வந்தநிலையில், இரண்டாம் பாகத்தில் அவருக்கும், அல்லு அர்ஜூனுக்கும் இடையே நடைபெறும் மோதல்களே கதையாக அமைய உள்ளது.

இந்நிலையில் ‘மலையன் குஞ்சு’ பட புரமோஷனுக்காக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஃபகத் ஃபாசில் ‘புஷ்பா - 3’ உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில், “புஷ்பா படத்தை முதலில் நெட்ஃபிளிக்ஸில் வெப் தொடராக இயக்கவே இயக்குநர் சுகுமார் திட்டமிட்டார். ஆனால் பின்னர் அதனை மாற்றிக்கொண்டார். முதலில் என்னிடம் கதை சொல்லும்போது, புஷ்பா 1, புஷ்பா 2 என்றெல்லாம் படம் இயக்கும் எண்ணம், இயக்குநர் மனதில் இல்லை. ஆனால் காவல்நிலைய காட்சிக்குப் பின் தான், என்னை வைத்து புஷ்பா இரண்டாம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் அவரது மனதில் உதித்தது.

அதன்பிறகு சமீபத்தில் இயக்குநர் சுகுமாரிடம் பேசியபோது, புஷ்பா 3-ம் பாகத்திற்கு தயாராக இருங்கள். ஏனெனில் நிறைய கதைகள் இன்னும் சொல்ல வேண்டி இருப்பதால் 3-ம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று பேசினார்” இவ்வாறு ஃபகத் ஃபாசில் தெரிவித்துள்ளார். இதனால் மலையாள, தெலுங்கு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com