'5 பேப்பர்.. கத்தரிக்கோல்..இது தான் எடிட்டிங்' - அசத்தல் விளக்கம் அளித்த எடிட்டர் ரூபன்!

'5 பேப்பர்.. கத்தரிக்கோல்..இது தான் எடிட்டிங்' - அசத்தல் விளக்கம் அளித்த எடிட்டர் ரூபன்!
'5 பேப்பர்.. கத்தரிக்கோல்..இது தான் எடிட்டிங்' - அசத்தல் விளக்கம் அளித்த எடிட்டர் ரூபன்!

18வது சென்னை சர்வதேச திரைப்படவிழா கடந்த 18ஆம் தேதி சென்னையில் துவங்கி நடைபெற்றுவருகிறது. சத்யம் குழும திரையரங்குகளில் நடைபெற்றுவரும் இவ்விழாவில் தினமும் இரண்டு திரைப்பிரபலங்களின் கலந்துரையாடல் நிகழ்வும் உண்டு. நான்காம் நாள் நிகழ்வில் படத்தொகுப்பாளர் ரூபன் கலந்து கொண்டார்.

2011ஆம் ஆண்டு கண்டேன் என்கிற தமிழ்த்திரைப்படத்தின் மூலம் தனது திரைவாழ்வைத் துவங்கிய படத்தொகுப்பாளார் ரூபன்., மெர்சல், தெறி, விவேகம், ராஜாராணி, வேலைக்காரன், பிகில், பூமி என இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் 100க்கும் அதிகமான ட்ரைலர்களுக்கும் படத்தொகுப்பு செய்திருக்கிறார். திரைப்பட விழாவில் பேசத்துவங்கிய ரூபன் முதலில் அரங்கில் இருந்து 5 மாணவர்களை அழைத்து அவர்கள் கையில் தலா ஒரு ஏ4 காகிதம் மற்றும் கத்தரிக்கோல் கொடுத்தார். “இதை வைத்து என்ன தோணுதோ பண்ணுங்க” எனச் சொல்லிவிட்டு உரையைச் துவங்கிய ரூபன் தன்னுடைய திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மாணவர் ஒருவர் ஒரு இயக்குநருக்கும் படத்தொகுப்பாளருக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும் எனக் கேட்டதற்கு “என்னைக் கேட்டால் கணவன் மனைவி உறவு போல இருக்கனும் என்பேன், ஆனால் அந்த உறவை ஏற்கனவே ஒளிப்பதிவாளர்கள் எடுத்துக் கொண்டதால், இயக்குநருக்கும் படத்தொகுப்பாளருக்குமான உறவு பாய் பிரண்ட் கேர்ள் பிரண்ட் உறவு போல இருக்கனும்” என்று சொல்லி அரங்கை கலகலப்பாக்கினார். ஏன் அப்படி எனக்கேட்டதற்கு “கணவன் மனைவி கூட சில விசயங்கள ஒளிச்சு மறச்சு பேசுவாங்க, ஆனா பாய் பிரண்ட் கேர்ள் பிரண்ட் உறவு அப்படியானது அல்ல” என்றார்.

மேலும் தான் படத்தொகுப்பு செய்ய அமர்ந்த போது இருந்த மனநிலையை விடவும் படத்தொகுப்பு முடிந்த பிறகு பார்த்து பெரிய திருப்தி அடைந்த சினிமா என அவர் அட்லி இயக்கிய ராஜாராணியை குறிப்பிட்டார். அரங்கில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் ரூபனிடம் “சார் படம் எடுத்து முடிஞ்ச பிறகு வந்து நீங்க இருக்க புட்ஏஜ்ல வேலை செய்வதை விடவும் கதை டிஸ்கஷனிலேயே நீங்கள் பங்கு எடுத்தா ஒரு படத்தொகுப்பாளராக உங்களுக்கு வேலை சுலபமாக இருக்குமே” எனக் கேட்டதற்கு., “உண்மை தான் என்னை கதை டிஸ்கசனிற்கு அழைத்தால் போவேன் சில படங்களுக்கு கதைக் கலந்துரையாடலில் பங்கெடுத்து இருக்கிறேன் இரும்புத்திரை படத்தின் கலந்துரையாடலில் நான் பங்கெடுத்தேன் அப்படத்தின் இயக்குநர் மித்ரன் நான் எழுதிக் கொடுத்த சில சீன்களைக் கூட விவாதத்திற்கு எடுத்துக் கொண்டார்., ஒரு படத்தொகுப்பாளர் கதை விவாதத்தில் பங்கெடுப்பது ஒரு நல்ல விசயம் தேவையானதை மட்டும் குறிப்பிட்டு சொல்லி அதனை மட்டுமே படமாக்கினால் போதும், இதனால் படத்தின் செலவு குறையும்.” என்றார். இப்படி பல சுவாரஸ்யமான விசயங்களை படத்தொகுப்பாளர் ரூபன் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வின் முடிவில் முன்பு குறிப்பிட்ட 5 மாணவர்களையும் அழைத்து நான் கொடுத்த ஏ4 காகிதத்தை வைத்து என்ன செய்தீர்கள் என ரூபன் கேட்ட போது ஐவரும் வெவ்வேறு வடிவங்களில் தனது கற்பனைக்கு ஏற்ப அதனை கட் செய்து க்ளாப் போர்டு, குடை, கப்பல் என உருவாக்கி இருந்தனர். இப்போது பேசிய ரூபன் “இது தான் படத்தொகுப்பு ஒரே கச்சாப் பொருளைத்தான் ஐவருக்கும் கொடுத்தேன் ஆனால் அவர்கள் வெவ்வேறு விசயங்களை உருவாக்கியிருக்கிறார்கள், படத்தொகுப்பும் அப்படித்தான், நம்மிடம் வரும் புட் ஏஜ்களை நாம் எப்படி கையாளப் போகிறோம் என்பதைப் பொறுத்தே ஒரு படத்தின் கடைசி அவுட்புட் வரும்” என விளக்கினார். அரங்கம் கரவொலியில் அதிர்ந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com