திரெளபதியின் சபதம் பலித்ததா...? - திரௌபதி திரைவிமர்சனம்.

திரெளபதியின் சபதம் பலித்ததா...? - திரௌபதி திரைவிமர்சனம்.

திரெளபதியின் சபதம் பலித்ததா...? - திரௌபதி திரைவிமர்சனம்.
Published on

ட்ரைலர் மூலம் பெரும் விவாதத்தை உருவாக்கிய திரெளபதி திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. ரிச்சர்டு, ஷீலா, அம்பானி சங்கர், கருணாஸ் என பலரும் நடித்திருக்கும் இப்படத்தினை க்ரவுட் பண்டிங் முறையில் இயக்குநர் மோகனே தயாரித்து இயக்கி இருக்கிறார்.

கிராமத்தில் சிலம்பம் கற்றுக் கொடுக்கும் வாத்தியாராக இருக்கும் ரிச்சர்டு தன் முறைப்பெண்ணான ஷீலாவை அதாவது திரெளபதியை திருமணம் செய்து கொள்கிறார். திரெளபதி மற்றும் அவரது தங்கையை ஆணவக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சிறைக்குச் செல்லும் ரிச்சர்டு ஆறுமாதம் கழித்து ஜாமீனில் விடுதலையாகிறார். வெளியே வரும் அவர் திரெளபதியின் சபதத்தை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி சில கொலைகளைச் செய்கிறார். திரெளபதியின் சபதம் என்ன., அவர்களின் கொலைக்குப் பின் இருக்கும் காரணம் என்ன என்பது தான் படத்தின் கதை.

படத்தின் முதல் பாதிமுழுக்க கதை எதை நோக்கி நகர்கிறது என்றே புரியவில்லை. நாம் அவ்வப் போது செய்தித் தாள்களில் படிக்கும் ஆணவக் கொலைகளுக்கு பின்னால் வேறொரு காரணமும் உண்டு என நிறுவ முயல்கிறார் இயக்குநர். காதலே நாடகம் என்கிறாரா அல்லது நிறைய நாடகக் காதல்கள் நடக்கிறன என்கிறாரா என்ற குழப்பம் இயக்குநருக்கே நிறைய உண்டு என்று தான் சொல்லவேண்டும். படத்தை பார்க்கும் நமக்கு ஒரு டிவி நாடகத்தை பார்க்கும் உணர்வைக் கொடுக்கிறது இந்த சினிமா. நடிகர்கள் தேர்வு, திரைக்கதை வடிவம், வசனம், ஒலி அமைப்பு, ஒளிப்பதிவு என எல்லாமே சுமார் ரகம்தான். ஜீபினின் பின்னனி இசைக்கு பாராட்டுகள்.

ரிச்சர்டு தன் நடிப்பில் ஸ்கோர் செய்ய கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை மீண்டும் தவற விட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஷீலா அளவிற்கு அதிகமான நடிப்பாலும் கத்தி பேசும் வசனத்தாலும் பல நேரங்களில் நம்மை பொறுமை இழக்கச் செய்கிறார்.

தமிழகம் முழுக்க நடக்கும் பதிவுத் திருமணங்களில் பெரும்பாலும் போலியானவை, பெண் பிள்ளைகளை பெற்றவர்களிடம் பணம் பறிக்கவே இப்படியானவை நடக்கின்றன எனச் சொல்ல முயல்கிறார் இயக்குநர் மோகன். கூடவே பதிவுத் திருமணங்கள் சிசிடிவி முன் நடைபெற வேண்டும், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயன்றிருக்கிறார் மோகன் என்று தான் சொல்ல வேண்டும். ஆணவக் கொலைகள் குறித்த வேறு ஒருகோணத்தை பதிவு செய்ய முயன்றிருக்கும் திரெளபதியின் சபதம் பழித்ததா என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com