திரைத் தொழில் முதல் சட்டப்பேரவை வரை... - உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்த பாதை!

திரைத் தொழில் முதல் சட்டப்பேரவை வரை... - உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்த பாதை!
திரைத் தொழில் முதல் சட்டப்பேரவை வரை... - உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்த பாதை!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் உதயநிதி. தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை சுமார் 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். அவர் கடந்த வந்த பாதை...

மு.க. ஸ்டாலினுக்கும், துர்கா ஸ்டாலினுக்கும் கடந்த 1977 ஆம் ஆண்டு மகனாக பிறந்த உதயநிதி ஸ்டாலின், சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் பள்ளிப்படிப்பையும், லயோலா கல்லூரியில் கல்லூரிப்படிப்பையும் (விஷுவல் கம்யூனிக்கேஷன் ) முடித்தார். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய உதயநிதி, முதன் முதலாக விஜய் நடிப்பில் வெளியான ‘குருவி’ படத்தை தயாரித்தார்.

அதனைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான ‘ஆதவன், கமல் நடிப்பில் வெளியான ‘மன்மதன் அம்பு’ உள்ளிட்ட படங்களை தயாரித்த அவர், இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தை தயாரித்ததோடு, அதில் கதாநாயகனாவும் அறிமுகமானார்.

அந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சிறந்த அறிமுக நாயகனுக்காக ஃபிலிம் பேர் விருதும், சிறந்த முகத்திற்கான விஜய் டிவியின் விருதும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ‘நண்பேண்டா’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

அரசியல் பிரவேசம்

படம் தொடர்பான ப்ரோஷன் நேர்காணல்களில் அவரிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பிய போதெல்லாம், அதனை மறுத்த உதயநிதி, அதற்கடுத்த காலக்கட்டங்களில் திமுக மேடைகளில் தென்பட துவங்கியது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியதோடு சந்தேகத்தையும் எழுப்பியது.

அதனைத்தொடர்ந்து 2019 ஆம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுகவிற்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டபோது அவர் அரசியல் வருகை உறுதியானது. உதயநிதி ஸ்டாலின் மகன் என்ற அடையாளமும், சினிமாவின் மூலம் கிடைத்த பிரபலமும் மக்கள் மத்தியில் அவர் எளிதாக சென்று சேர உதவியது.

அந்தத் தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 இடங்களை பிடித்து அபார வெற்றிப்பெற்றது. அந்த வெற்றியைத்தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் பதவியும் உதயநிதியை தேடி வந்தது. அப்போது உதயநிதி தொண்டர்களின் அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் மட்டுமே பதவியை ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

தொடர்ந்து அரசியல் களத்தில் ஈடுபட்ட உதயநிதிக்கு தமிழக சட்டமன்றத் தேர்தலில்  1996, 2001, 2006 ஆம் ஆண்டுகளில் கருணாநிதி களம் கண்டு வெற்றிப்பெற்ற தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி ஒதுக்கப்பட்டது. 

கிராம சபைக் கூட்டங்கள் மூலம் ஸ்டாலின் ஒருபக்கம் பிரசாரம் மேற்கொண்டிருக்க, மறுபக்கம் தனக்கே உரித்தான பாணியில் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார். “அதிமுக அரசு மோடிக்கு அடிமையாக இருக்கிறது, மாநில அரசு அஞ்சு நடுங்குகிறது” உள்ளிட்ட கருத்துக்களை முன்வைத்த பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி, அதிமுக அமைச்சர்களை தனது நக்கலான பேச்சால் கிண்டலடிக்கவும் செய்தார்.

குறிப்பாக சகோதரி வீட்டில் ரெய்டு நடந்தபோது “வருமானவரித் துறையினர் முடிந்தால் எனது வீட்டிற்கு ரெய்டு வாருங்கள்” என்று கூறியதும், எய்ம்ஸ் மருத்துவமனையை பிரித்து எடுத்துவந்து விட்டேன் என்று செங்கலை வைத்து பிரசாரம் செய்ததும் ட்ரெண்டாகின.

அவரின் பிரசாரம் அவருக்கு மட்டுமல்லாமல் மொத்தக்க கட்சிக்குமான பிரசாரமாகவும் குறிப்பாக இளைஞர்கள் பலரை கவர்ந்து இழுக்க உதவியதாக திமுக சார்பில் பேசப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com