இந்தியன் 2 பிரச்னையை பேசித்தீர்க்க முடியவில்லை - ஷங்கர்

இந்தியன் 2 பிரச்னையை பேசித்தீர்க்க முடியவில்லை - ஷங்கர்
இந்தியன் 2 பிரச்னையை பேசித்தீர்க்க முடியவில்லை - ஷங்கர்

லைகா நிறுவனத்துடனான இந்தியன் 2 படப்பிரச்னையை பேசித்தீர்க்க முடியவில்லை என உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ளார்.

இந்தியன் - 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் இயக்குநர் ங்கர் பிற படங்களை இயக்க தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2022ம் ஆண்டு மே மாதம் முதல் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்குநர் ஷங்கர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரையிலான ஐந்து மாதங்களில் படத்தை முடித்து கொடுத்து விடுவார் எனவும் தெரிவித்தார்.

தயாரிப்பு நிறுவனம் ஷங்கருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாகவும், அவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திய ஷங்கர் தரப்பு வழக்கறிஞர், நடிகர் விவேக் இறந்து விட்டதால் அவர் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டியுள்ளதாகவும் ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவரங்களை மறைத்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

லைகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இயக்குநர் ஷங்கருக்கு ஏற்கெனவே 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதித் தொகையை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பழைய விஷயங்களை மறந்து எதிர்காலத்தை கருத்தில் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவு என்பது சுமூக தீர்வை ஏற்படுத்தாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூகத் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை இன்றைக்குத் தள்ளிவைத்திருந்தனர்.

இந்நிலையில், லைகா நிறுவனத்துடனான இந்தியன் 2 படப்பிரச்னையை பேசித்தீர்க்க முடியவில்லை என உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் இன்று நீதிமன்றத்தில் கூறியுள்ளார். மேலும் ஜூன் மாதத்திற்குள் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என லைகா நிறுவனம் விரும்புகிறது; ஆனால் அக்டோபருக்குள் இந்தியன் 2 படத்தை முடித்துக்கொடுக்க தயார் என இயக்குநர் ஷங்கர் தரப்பு விளக்கமளித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் தரப்பு தகவல் அளித்ததையடுத்து வழக்கை ஜூன் மாதத்திற்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com