அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி மெட்ராஸ், கபாலி என பல வெற்றி படங்களைத் தந்தவர் இயக்குனர் பா. இரஞ்சித். இயக்குனராக தடம் பதித்த இவர் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்துள்ளார்.
இயக்குனர் பா.இரஞ்சித், நீலம் புரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக பரியேறும் பெருமாள் என்ற படத்தை அவர் தயாரிக்கிறார். மாரி செல்வராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். மாரி செல்வராஜ், கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்தவர்.
காதல் படமாக உருவாகும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதிர் கதாநாயகனாவும், அவருக்கு ஜோடியாக ஆனந்தியும் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.