“எங்களை குப்பைப்போல நடத்துனீங்க” கெளதம் மேனன் மீது புகார்
இளம் இயக்குநர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் கெளதம் மேனன் மீது காட்டமான புகாரை முன் வைத்துள்ளார்.
‘துருவங்கள்16’ மூலம் பரவலாக அறியப்பட்டவர் கார்த்திக் நரேன். கடந்த ஆண்டு வியாபார ரீதியாக பெரும் வெற்றியை இந்தப் படம் பெற்றது. இவரது அடுத்தப் படைப்பான ‘நரகாசூரன்’ தற்சமயம் தயாராகி வருகிறது. இப்படம் வெளியாவதற்கு முன்பே தனது அடுத்த படத்தின் ‘நாடகமேடை’ தலைப்பை அறிவிக்கும் அளவுக்கு வேகமாக இயங்க ஆரம்பித்தார் நரேன். ‘நரகாசூரன்’படத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் பெரிய இடைவெளிக்குப் பின் மீண்டும் ஸ்ரேயா சரண் நடித்திருக்கிறார். இப்படத்தினை கெளதம் மேனன் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும் கெளதம் மேனனுக்கும் இடையில் ஏதோ உரசல் இருப்பதாக தெரிகிறது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முதலில் “யார் மீதும் நம்பிக்கை வைப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்” என பூடகமாக ஒரு ட்விட் போட்டிருந்தார்.
அதன் பின் கெளதம் மேனன் ஒரு வீடியோவை வெளியிட்டு அது உருவான விதத்தை பாராட்டி இருந்தார். அதனைக் கண்ட கார்த்திக் நரேன், அதன் கீழ் சென்று ஒரு பதிவை இட்டார். அதில், “பலர் என்னிடம் அறிவுரைக் கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் நீங்கள் என்னை குப்பையைப்போல நடத்தினீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்ய வேண்டியதாக இருந்தது. தயவு செய்து இப்படி யாரையும் இனி ஏமாற்றாதீர்கள்” என்று கருத்திட்டார். அந்தப் பதிவிவைக் கண்ட பலரும் கெளதம் தயாரிப்பதாக கூறிவிட்டு கடைசியில் கைவிறித்துவிருக்கிறார் என புரிந்து கொண்டனர். அதையொட்டி சர்ச்சை நீண்டாலும் அதற்கு இதுவரை கெளதம் மேனன் பதில் அளிக்காமல் மெளனமாக இருந்து வருகிறார். இவரை சுற்றி இப்படி பல குற்றச்சாச்ட்டுக்கள் அடிக்கடி எழுவதும் பின் அது மறைவதும் வாடிக்கையாகியுள்ளது.