தலைவனுக்கான முழுத் தகுதியும் உடையவர் கமல்: பாரதிராஜா
அரசியலில் விஸ்வரூபமாய் வெற்றிபெற கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
சமீப காலமாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து பாரதிராஜா பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆண்டாள் சர்ச்சையில் வைரமுத்துவுக்கு ஆதராக தொடர்ந்து குரல் கொடுத்தார். தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற கருத்தினை தொடர்ச்சியாக கூறி வருகிறார். அந்த வகையில் ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், கமல்ஹாசனின் அரசியல் வருகைக்கு பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஓர் தலைவனுக்கான முழுத்தகுதியும் உடையவர் நம்மவர் கமல்ஹாசன் என்றும் திரையில் தெரிந்த கமலின் தசாவதாரம் அரசியலில் விஸ்வரூபமாய் வெற்றிபெற வாழ்த்துகள் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாரதிராஜா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கமல்ஹாசன் தன் திரைப்படங்களில் மூலம் சமூகக் கருத்துக்களை மக்களிடம் விதைத்தவர்தான். தன் நற்பணி மன்றத்தின் மூலம் மக்கள் பணியாற்றியவர்தான். இரத்த தானத்திலிருந்து தன் உடலையே தானம் செய்தவர் கமல். அவர் அரசியலுக்கு வரவேண்டுமென்ற உள்நோக்கத்தோடு இதுபோன்ற நற்பணிகளை செய்தவரல்ல, உண்மையான தொண்டுள்ளம் கொண்ட காரணத்தினால்தான் செய்தார். ஓர் தலைவனுக்கான முழுத் தகுதியும் உடையவர் நம்மவர் கமல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மக்கள் புரட்சியினால் மட்டும்தான் மாற்றம் கொண்டு வரமுடியும். உங்கள் மக்கள் நீதி மய்யத்தின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான் என்று சொல்வார் பெர்னாட்ஷா. கமல் நீங்கள் செய்ய முடிந்தவர். திரையில் தெரிந்த கமலின் தசாவதாரம் அரசியலில் விஸ்வரூபமாய் வெற்றிபெற வாழ்த்துகள்” என்றும் பாரதிராஜா கூறியுள்ளார்.