இன்னும் நம்பிக்கை இருக்கிறது - எஸ்பிபி குறித்து பேசிய பாரதிராஜா
சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 7 ஆம் தேதி நுரையீரலில் ஏற்பட்ட பிரச்னை வேகமாக குணமடைந்து வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் கூறினார்.
செப்டம்பர் 8 ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தது.இதைத் தொடர்ந்து எஸ்.பி.பி. கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாகவும், அந்த நல்ல செய்திக்காகவே தாம் காத்திருந்ததாகவும் எஸ்.பி.பி. சரண் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் எஸ்.பி.பியின் உடல்நிலை தற்போது மீண்டும் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிவித்தது. இந்நிலையில் இன்று காலை முதல் திரையுலகினர் பலரும் மருத்துவமனைக்கு வருகைதந்த வண்ணம் உள்ளனர். மருத்துவமனைக்கு வந்த இயக்குநர் பாரதிராஜா தழுதழுத்த குரலில் எஸ்பிபி குறித்து பேசினார்.
அதில், சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது. துக்கம், வருத்தத்தில் இருக்கும்போதோ, சில சூழ்நிலைகளிலோ எனக்கு வார்த்தைகள் வராது; இன்னும் நம்பிக்கை இருக்கிறது. இயற்கைக்கு முன் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை. நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. அதன் முடிவு தான் நம் முடிவு என தெரிவித்துள்ளார்