சினிமா
‘ஹைதராபாத் டூ சென்னை’: விமானத்தை தவிர்த்து 600 கி.மீ பைக்கில் பயணம் செய்த அஜித்?
‘ஹைதராபாத் டூ சென்னை’: விமானத்தை தவிர்த்து 600 கி.மீ பைக்கில் பயணம் செய்த அஜித்?
ஹைதராபாத்திலிருந்து 600 கி.மீட்டர் தூரத்தை நடிகர் அஜித் பைக்கில் பயணித்ததாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.
அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இதனை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இவருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் அஜித். அதாவது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தினை அடுத்து இதில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. மேலும் சென்னையிலும் நடைபெற்றது. ஏறக்குறைய இப்படத்தின் படப்பிடிப்புகள் பாதி நடந்து முடிந்துவிட்டன எனக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை எடுப்பதற்காகப் படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக உலகமே முடங்கியது. அதனால் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. எனவே படக்குழு வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் தமிழ்த் திரை உலகில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆகவே இந்தப் படம் பற்றிய மேலும் புதிய அறிவிப்பிற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த வேலை நிறுத்தத்தால் படம் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அவ்வாறு முடிக்கப்படாவிட்டால் வெளியாவதில் தாமதம் நேரலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அஜித் குறித்த ஒரு சுவாரஸ்யமான விசயம் தற்போது தெரியவந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டபோது அஜித், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த ‘வலிமை’ படப்பிடிப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து அவர், அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணிக்காமல், போடப்பட்டிருந்த டிக்கெட்டை ரத்து செய்யச் சொல்லிவிட்டு ஏறக்குறைய 600 கிலோ மீட்டர் தூரத்தை பைக்கிலேயே பயணித்து வீடு வந்து சேர்ந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமானதல்ல.
இது குறித்து அஜித்திற்கு நெருங்கிய வட்டத்தினரை விசாரித்த போது, ‘அஜித்திற்கு பைக் ஓட்டுவது பிடிக்கும். அவர் பைக்கில் பயணிப்பதை விரும்பக் கூடியவர். ஆனால் அவர் முறையான ஓடு தளத்தில்தான் தனது பைக் பயணத்தை மேற்கொள்வார். இதைப்போன்ற பொது சாலைகளில் பைக் பயணத்தை மேற்கொள்ள மாட்டார்’ எனக் கூறுகின்றனர்.

