மாரி செல்வராஜுடன் இணையும் துருவ் விக்ரம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.
’விபத்துகள்... தற்கொலைகள்... என திடீர் திடீரென்று நடக்கும் சம்பவங்களை வழக்கமான ஊடகச் செய்திகளாக கடந்து விடக்கூடாது. விசாரணை செய்துபார்த்தால் கொலைகளாக இருக்கலாம். அதுவும், மரணித்தது இளம் பருவத்தினராக இருந்தால் அவை, திட்டமிடப்பட்ட ஆணவப்படுகொலைகளாக இருக்கலாம்’ என்ற உண்மையை ’பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் சமூகத்திற்கு அழுத்தமாகச் சொல்லி கவனம் ஈர்த்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது. அதனைத்தொடர்ந்து, நடிகர் தனுஷ் 'கர்ணன்' படத்தின் வாய்ப்பை மாரி செல்வராஜுக்கு கொடுத்தார். இப்படத்தின், படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ள நிலையில், மாரிசெல்வராஜ் தனது அடுத்தப் படத்தை துருவ் விக்ரமை வைத்து எடுக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியானது.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெற்றி பெற்ற ’அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான பாலாவின் ‘வர்மா’வில்தான் அறிமுகமானார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு வராததால், ஆதித்யா வர்மாவாக தயாரிப்பு நிறுவனம் வேறு இயக்குநரை வைத்து இயக்கி கடந்த ஆண்டு வெளியிட்டது. ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பாலா இயக்கிய ‘வர்மா’ வும்வெளியானது. அதுவும், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில், வெற்றி கொடுத்தாக வேண்டிய நம்பிக்கையுடன் தனது அடுத்தப் படமாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார். இதனை, நேற்றிரவு மாரி செல்வராஜுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருடன் இணைவதையும் மகிழ்ச்சியோடு அறிவித்திருக்கிறார் துருவ் விக்ரம், விளையாட்டை மையப்படுத்திய இக்கதையை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.