தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'கர்ணன்' திரைப்படம் மூன்று நாட்களில் 31 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கலைப்புலி' எஸ்.தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் 525 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இதன்மூலம் முதல் நாள் 11 கோடி ரூபாய்க்கு மேலாகவும், இரண்டாவது நாள் ரூ.8 கோடிக்கு மேலாகவும், மூன்றாவது நாள் 11 கோடிக்கு மேலாகவும் வசூல் செய்ததாக திரையரங்கு வட்டாரத்தில் கூறுகின்றனர். இந்த வசூலால், தயாரிப்பாளருக்கு மூன்றே நாட்களில் 22 கோடி ரூபாய் பங்கு கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
'கர்ணன்' படத்திற்கு இரு வேறு விமர்சனங்கள் இருந்தாலும், வரும் நாட்களிலும் பெரும் வசூலை ஈட்டும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதுவரை வெளியான தனுஷ் படங்களிலேயே 'கர்ணன்' படமே முதல் மூன்று நாள்கள் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது என சினிமா துறையினர் கூறுகின்றனர்.