வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் வடசென்னையில் தனுஷ் இடம் பெறும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு அனைத்தும் தற்சமயம் முடிந்துள்ளது. ஆகவே அவர் அடுத்த படமான மாரி2வில் இணைய இருக்கிறார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மூன்றாவது படம் வடசென்னை. இந்தக் கதை குறித்து பல வருடங்களாகவே வெற்றிமாறன் பேசி வந்தார். அனைவரும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டே இருந்தது. அதோடு ஆரம்பித்தவுடன் விஜய்சேதுபதி இணைவதாக இருந்தது. பிறகு அவரும் வெளியேறினார். அனைத்துக்கும் படப்பிடிப்பின் தாமதமே காரணமாக கூறப்பட்டது.
வடசென்னையில் முப்பது ஆண்டுகால சென்னை கலாச்சார வாழ்வை படம் பிடிப்பதால் இப்படியான தாமதங்கள் தவிர்க்க முடியாதவை என படக்குழு தரப்பில் பேச்சுகள் லேசாக வெளி வந்தன.
இந்நிலையில் தனுஷ் தன் முழு வேலைகளையும் முடித்து கொடுத்துவிட்டார். அவர் அடுத்து மாரி2 படப்பிடிப்புக்கு செல்கிறார். மாரி 2 படத்தில் சாய் பல்லவி, கிருஷ்ணா நடிக்க இருப்பதாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.