அனைவரின் பாராட்டுக்களையும் வரவேற்பையும் குவித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கும், அதே படத்தில் ஹீரோயின்களில் ஒருவராக நடித்த நடிகை நிரஞ்சனி அகத்தியனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் சூப்பர் ஹிட் அடித்ததோடு பெரிதும் பாராட்டுக்களைக் குவித்தது.
துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி, கெளதம் மேனன் என குறைந்த நடிகர்களை வைத்து மெகா ஹிட் படமாக்கினார், அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி.
இதில், கொள்ளையடிக்கும் பெண்ணாக ரக்ஷன் ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார் நடிகை நிரஞ்சனி அகத்தியன்.இவர், அஜித் நடிப்பில் தேசிய விருது குவித்த ‘காதல் கோட்டை’ படத்தின் இயக்குநர் அகத்தியனின் மூன்றாவது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் மூத்த மகள் கிருத்திகா, இரண்டாவது மகள் நடிகை விஜயலட்சுமி, மூன்றாவது மகள் நிரஞ்சனி அகத்தியன். நிரஞ்சனி தற்போது திருமண பந்தத்துக்குள் நுழைய உள்ளார். இயக்குநர் தேசிங் பெரியசாமியை திருமணம் செய்யவுள்ளார் நிரஞ்சனி.
இத்தகவலை, நிரஞ்சனியின் அக்கா கணவர் இயக்குநர் திரு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.