”நான் ரெடி தான் பாடலுக்காக நடனமாடியதற்கு ஒருநாள் கூட சம்பளம் வரவில்லை"- குமுறும் லியோ டான்சர்கள்!

"லியோ திரைப்படத்தில் நடனமாடியதற்காக இன்னும் 3 நாட்களுக்குள் எங்களுக்கு சம்பளம் வரவில்லை எனில், நீதிமன்றத்தில் பெட்டிஷன் போடுவோம்" - நடன கலைஞர்கள்
leo
leopt web

” லியோ திரைப்படத்தின் 'நான் ரெடி தான்' பாடலுக்காக ஆறு நாட்கள் நடனமாடியதற்கு, எங்களுக்கு ஒருநாள் கூட சம்பளம் தரவில்லை. இன்னும் 3 நாட்களுக்குள் எங்களுக்கு சம்பளம் வரவில்லை எனில், நீதிமன்றத்தில் பெட்டிஷன் போடுவோம்” என்று நடன கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘நான் ரெடி தான்’ பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த பாடலில் பின்னணி நடன கலைஞர்களாக பணியாற்றிய சுமார் 1300-க்கும் மேற்பட்டோருக்கு படக்குழு சார்பில் இருந்து இதுவரை இன்னும் ஒரு ரூபாய் சம்பளம் கூட கொடுக்கவில்லை என்று நடன கலைஞர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

நான் ரெடி தான் பாடலுக்கு நடனமாடுவதற்காக சுமார் 4 மாதங்களுக்கு முன்பு சென்னை வடபழனி பிரசாத் லேபில் ஆடிஷன் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடிஷனில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 1300 நடன கலைஞர்கள், 8 நாட்கள் கால்ஷீட்டில் ஒரு நபருக்கு 20,000 ரூபாய் பேமெண்ட்டில் நடனமாட வேண்டும் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை பனையூரில் நடைபெற்ற இந்த பாடலுக்கான படப்பிடிப்பு 8 நாட்கள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 6 நாட்களிலேயே பாடலின் படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துள்ளனர். அதேபோல், சொல்லப்பட்ட 8 நாட்களில் 2 நாட்கள்போக மீதி 6 நாட்களுக்கு 16,000 ரூபாய் மட்டும் சம்பளம் வழங்குவதாகவும், அதற்காக ஒவ்வொருவரும் அவரவர் வங்கிக் கணக்கு விவரங்களை கொடுக்குமாரும்கூறி படக்குழு சார்பில் நடன கலைஞர்களின் வங்கி விவரங்களை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ”பாடலுக்கான படப்பிடிப்பு முடிந்து 4 மாதங்கள் ஆகிவிட்டது. நடனமாடிய திரைப்படம் வெளியாக இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், இதுவரை 1300 நடன கலைஞர்களுக்கு ஒரு ரூபாய் கூட படக்குழு சம்பளம் தரவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்தையும், தங்கள் யூனியனையும் தொடர்பு கொண்டபோது, இன்னும் ஓரிரு நாட்களில் சம்பளம் வந்து விடும் என்று தெரிவித்தனர். ஆனால் வரவில்லை.

இது படத்தின் புரோமோஷனுக்காகவோ அல்லது யாருடைய தூண்டுதலின் பேரிலோ நாங்கள் இதை செய்யவில்லை. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள் என்பதால் எங்களுடைய சம்பளத்தை கேட்டு நாங்கள் போராடுகிறோம். இன்னும் மூன்று நாட்களுக்குள் எங்கள் சம்பளம் கிடைக்கவில்லை எனில், நாங்கள் 1300 பேரும் நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தெரிவிக்கின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com