இரும்புத்திரை படத்திற்கு தடையில்லை: உயர்நீதிமன்றம்
விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள இரும்புத்திரை படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடிகர்கள் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் இரும்புத்திரை. படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அதுகுறித்த காட்சிகளை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்கக்கோரி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குறிப்பிட்ட சில காட்சிகள் நீக்கப்படாமல் படம் வெளியானால் டிஜிட்டல் இந்தியா, மற்றும் ஆதார் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படும் எனக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட நேரிடும் என்றும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தணிக்கை வாரியம் தணிக்கை செய்த பிறகே படம் வெளியாவதால் தடை விதிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.