சட்டப்பூர்வமாக பிரிந்த நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா! விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இது குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் ட்விட்டரில் இருவரும் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டிருந்தனர். இருவருக்கும் சமாதானம் செய்து வைக்க குடும்பத்தினரும் நட்பு வட்டாரத்தினரும் முனைந்தபோதும் மணமுறிவு பெறுவதில் இருவரும் தீவிரம் காட்டியதால் முடிவுகள் சாதகமாக அமையவில்லை என சொல்லப்பட்டது.
இதையடுத்து 6 மாதமாக இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கான நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இன்று இருவருக்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கியுள்ளது நீதிமன்றம்.
சட்டப்பூர்வமாக பிரிந்த நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா!
முன்னதாக நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமண பதிவை ரத்து வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா நேரில் ஆஜராகி இரண்டு பேரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்து நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பதிவேட்டில் கையொப்பம் இட்டனர்.
பின்னர் இருவருக்கும் விவாகரத்து வழங்கும் வழக்கின் தீர்ப்பு நவம்பர் 27-ம் தேதியான இன்று தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் இன்று விவாகரத்து வழங்கியுள்ளது நீதிமன்றம். இதன்மூலம் சட்டப்பூர்வமாக தனுஷ்-ஐஸ்வர்யா பிரிந்தனர்.