தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தின் டிரைலருக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மன்மோகன் சிங் பிரதமரான சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர். இந்தப் படத்தை விஜய் ரத்னகார் இயக்கியுள்ளார். காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றும், அக்கட்சியின் அப்போதைய தலைவர் சோனியா காந்தி பிரதமராக முடியவில்லை. அவருக்கு பதிலாக பொருளாதார வல்லுனரான மன்மோகன் சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து, மன்மோகன் சிங்கிடம் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு என்பவர் எழுதிய புத்தகம் தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர். இந்தப் புத்தகத்தைத் தழுவி, அதே பெயரில் தற்போது திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் 2014 பொதுத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி அரசியலுக்கு மன்மோகன்சிங் பலிகடா ஆக்கப்பட்டதாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி இந்தப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் படத்தின் டிரைலருக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் டிரைலருக்கு தடை விதிக்க முடியாது எனவும், மனுதாரர் வேண்டுமென்றால் நீதிமன்ற அமர்வை நாடலாம் எனவும் தெரிவித்துள்ளது.