நடிகை ரோஜா பற்றி ஆபாச பேச்சு: இயக்குனர் மீது வழக்கு

நடிகை ரோஜா பற்றி ஆபாச பேச்சு: இயக்குனர் மீது வழக்கு

நடிகை ரோஜா பற்றி ஆபாச பேச்சு: இயக்குனர் மீது வழக்கு
Published on

பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசியதாக, தெலுங்கு பட இயக்குனர் அஜய் கவுன்டின்யா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

’என்.ஹெச்.47 பூத் பங்களா’ என்ற தெலுங்கு படத்தை இயக்கி இருப்பவர் அஜய் கவுன்டின்யா. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸில் சமீபத்தில் நடந்தது. 

இதில் பேசிய இயக்குனர் அஜய், ‘நடிகை ரோஜா, எம்.எல்.ஏவாக இருக்கிறார். சினிமா தொழிலாளர்கள் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். பல்வேறு பிரச்னைகளைப் பற்றி பேசும் ரோஜா, சினிமா துறை பிரச்னையை பற்றி சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி, அதை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்’ என்றார். 

அவர் மேலும் பேசும்போது, ‘இயக்குனர் ராம் கோபால் வர்மா, ’காட், செக்ஸ் அண்ட் ட்ரூத்’ என்ற படத்தை ஹாலிவுட் பாலியல் பட நடிகை மியா மால்கோவாவை வைத்து இயக்கி இருக்கிறார். நான் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகை ரோஜாவை நடிக்க வைத்து எடுக்க தயாராக இருக்கிறேன்’ என்றார். மேலும் பெண்கள் பற்றியும் அவர் ஆபாசமாகப் பேசினாராம். இது சர்ச்சையை கிளப்பியது. 


ஆந்திராவில் உள்ள பல பெண்கள் அமைப்புகள் இதற்கு அஜய் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இரண்டு நாட்களுக்கு முன், தான் பேசியது தவறுதான் என்று மன்னிப்புக் கேட்டார் அஜய். இந்நிலையில் சமூக நல ஆர்வலர்கள், அஜய் மீது பஞ்சரா ஹில்ஸ் போலீசில் புகார் கொடுத்தனர். 

இதுபற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ் கூறும்போது, ‘இயக்குனர் அஜய் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். புகாருக்கு ஆதாரமாக, யு-டியூப் லிங் கொடுத்திருக்கிறார்கள். அஜய்யிடம் விசாரணை நடத்த உள்ளோம்’ என்றார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com