\
vijay
vijaypt desk

போதைப் பழக்கத்தையும் ரவுடியிசத்தையும் தூண்டுவதாக நடிகர் விஜய் மீது புகார்!

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் பாடல்கள் இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு தள்ளும் வகையில் இருப்பதாகவும் ரவுடியிசத்தில் தள்ளும் வகையில் இருப்பதாகவும் செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணைய அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக புகார் மனு அளித்துள்ளார்.
Published on

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஆர்த்தி ஐ.செல்வம். இவர், பல விதமான பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்து வருகிறார். இதில் தற்போது நடிகர் விஜய் மீது இவர் புகாரளித்துள்ளார். அதன் பின்னணியை, இங்கே பார்ப்போம்.

நடிகர் விஜய் பாடி, நடித்திருக்கும் ‘நா ரெடி’ எனும் லியோ படத்தின் பாடல் ஜூன் 22 வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் தற்போது அது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பாடலில் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் ரவுடியிசத்தை உருவாக்கும் வகையிலும் நடிகர் விஜய் நடித்திருப்பதாக ஆன்லைன் மூலமாக காவல் நிலையத்திற்கு புகார் மனு அளித்துள்ளார் செல்வம்.

இதில் நடிகர் விஜய் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனை ஆதரிக்கும் வகையில் பாடலை கைடு செய்த நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்வம் புகார் மனு அளித்துள்ளார். மேலும் இன்று நீதிமன்றம் மூலமாக மனு அளிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல்துறை உயர் அதிகாரிகள் சென்னை முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள். அப்படியான நேரத்தில், இந்தப் பாடல் தற்போது வைரலாகி வருவது, போதைப் பொருட்களை உபயோகிக்கும் வகையில் இளைஞர்கள் மத்தியில் தூண்டுதலாக அமைந்திருப்பதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com