திரை அரங்குகளின் கட்டணத்தை ரூ. 160 வரை உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி அறிவிப்பால் தமிழ்சினிமா நஷ்டத்தில் தள்ளப்படும் என்று திரைத்துறையினர் போராடி வந்தனர். இந்தப் பிரச்னையுடன் தமிழக அரசும் கேளிக்கை வரிச் சலுகையில் சில மாற்றங்களை அறித்தது. இந்த அறிவிப்பினால் மேலும் சினிமா தொழில் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகும் என கூறி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதோடு திரையரங்குகளை மூட இருப்பதாகவும் தீபாவளிக்கு எந்தப் படங்களும் வெளியிடப்படாது என்றும் அறிவித்திருந்தனர்.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் தமிழக அரசு புதிய டிக்கெட் கட்டணங்களுக்கான அரசாணையை இன்று பிறப்பித்துள்ளது. அதன்படி
சென்னையில் ஏசி மல்டிபிளக்ஸ் திரையரங்களின் கட்டணம் அதிகபட்சமாக ரூ.160ம் குறைந்தபட்சமாக ரூ.50ம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏசி அல்லாத திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக ரூ.120ம் குறைந்தபட்சம் ரூ.40ம் கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம்.
சென்னை அல்லாத பிற மாநகரங்களில் ஏசி திரையரங்க கட்டணம் அதிகபட்சமாக ரூ.140ம், குறைந்தபட்சமாக ரூ.50ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி அல்லாத திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக ரூ.100ம் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30ம் வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நகராட்சி எல்லைக்கு உட்பட்டுள்ள ஏசி திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக ரூ.40ம், குறைந்த பட்ச கட்டணமாக ரூ.5ம் வசூலிக்கலாம். இதே போன்று ஏசி அல்லாத திரையரங்குகளில் ரூ.30 அதிகபட்ச கட்டணமாகவும் ரூ.5 குறைந்தபட்ச கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சிகளில் உள்ள ஏசி இல்லாத திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ.20 மட்டுமே வசூலிக்கலாம். ஊராட்சிகளில் ஏசி இல்லாத திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக ரூ. 15 மட்டுமே வசூலிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய கட்டண விகிதங்கள் வருகிற திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன.