”ராஜமெளலியுடன் இணையாததற்கு இதுதான் காரணம்” - ரகசியம் உடைத்த சிரஞ்சீவி!
தெலுங்கு திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவர், தற்போது ‘விஸ்வம்பரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து, ’தசரா’ பட இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்திலும், அனில் ரவிபுடி இயக்கத்திலும் நடிக்க உள்ளார். அதேபோல், இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுகிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி. ‘பாகுபலி’ என்ற ஒரே படத்தின் மூலம் இந்திய திரையுலகையே மாற்றிக் காட்டியவர். அடுத்து, பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர் மூலம் மீண்டும் மீண்டும் வெற்றிகளைப் பெற்றார். இதனால், அவரது படத்தில் நடிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும், ராஜமெளலியும் சிரஞ்சீவியும் இதுவரை இணைந்ததில்லை.
இந்த நிலையில் ராஜமெளலி இயக்கத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்து சிரஞ்சீவி, “ராஜமெளலி ஒரு படத்திற்கு 3-4 வருடங்கள் எடுத்துக்கொள்கிறார். அதனால், அவ்வளவு காலம் என்னால் ஒரே படத்தில் நடிக்க முடியமா என்று தெரியவில்லை. நான் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் 3-4 ஆண்டுகள் ஒரு படத்தில் பணிபுரிவது சாத்தியமில்லை. அதனால்தான் நான் அவருடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று சொன்னேன். ராஜமௌலியுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் தன்னை ஒரு அகில இந்திய நட்சத்திரமாக நிரூபிக்க வேண்டிய அவசியமுமில்லை” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ராஜமௌலி தற்போது மகேஷ் பாபு நடிக்கும் ரூ.1000 கோடி படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தில் பிருத்விராஜ் மற்றொரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.