உப்பெனா ரீமேக் விவகாரம்: விஜய்சேதுபதி பட நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

உப்பெனா ரீமேக் விவகாரம்: விஜய்சேதுபதி பட நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
உப்பெனா ரீமேக் விவகாரம்: விஜய்சேதுபதி பட நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தெலுங்கில் ஹிட்டான உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், நடிகர் விஜய் சேதுபதியின் பட நிறுவனமும், தெலுங்கு பட இயக்குனர் புஜ்ஜி பாபு சனா, இன்னும் சிலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் தெலுங்கில் உருவான 'உப்பெனா' படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் சுகுமார் என்பவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புஜ்ஜி பாபு சனா படத்தை இயக்கி இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான உப்பெனா, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றதால், அதை தமிழில் மறு உருவாக்கம் செய்யும் ரீமேக் உரிமையை, அந்த படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வாங்கியது.

இந்நிலையில் தனது கதை திருடப்பட்டு உப்பெனா படம் உருவாக்கப்பட்டதாக தேனியை சேர்ந்த எஸ்.யு.டல்ஹவுசி பிரபு என்ற உதவி இயக்குனர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில் "தேனி மாவட்டத்தை சேர்ந்த திரைப்பட இயக்குனரும், இசையமைப்பாளருமான தனது தந்தை எஸ்.உதயசூரியனின் மூலம் சினிமாவில் ஏற்பட்ட ஆர்வத்தால் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தேன்.

முதலில் தன் தந்தையுடன் கதை விவாதங்களில் ஆர்வமுடன் பங்கேற்றதாகவும், அதன் பின்னர் தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் இயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். ஜெயக்குமாரின் திரைக்கதை, மகாபலிபுரம் ஆகிய படங்களில் பணியாற்றி, பின்னர் அய்யாசாமி என்ற படத்தில் விவசாயியாக நடித்துள்ளேன். 

நான் உருவாக்கிய உலகமகன் என்ற கதையை தர்மபுரியை சேர்ந்த சம்பத்  என்ற உதவி இயக்குனரிடம் 2015ஆம் ஆண்டு தெரிவித்து இருந்தேன். அது மிகவும் பிடித்துப்போய் அதைப் படமாக்கலாம் என அவர் உத்திரவாதம் அளித்திருந்தார். 

காதலின் புனிதத்தை உணர்த்தும் புதிய கருத்துக்களுடன் கூடிய தனது கதையில் தமிழ் நடிகர்கள் யாரும் நடிக்க முன்வராததால், தெலுங்கு பட உலகில் முயற்சிக்கலாம் என சம்பத் தெரிவித்ததால், கதையின் கரு முதல் திரைக்கதை வரை அனைத்தும் அடங்கிய தொகுப்பை அனுப்பினேன். சம்பத்துக்கு அனுப்பிய எனது உலகமகன் படைப்பு சிலரால் திருடப்பட்டு, தெலுங்கில் உப்பெனா என்ற படமாக உருவாகியுள்ளது. 

எனவே உப்பெனா படத்தின் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும். அதன் மூலம் ஈட்டிய வருமானத்தில் 50 சதவீதத்தை எனக்கு கொடுக்க உத்தரவிட வேண்டும் அதன் ரீமேக்கை தமிழில் விஜய் சேதுபதி பட நிறுவனம்  தயாரிக்க தடை விதிக்க வேண்டும். பிற மொழிகளில் ரீமேக் உரிமையை விற்க தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

டல்ஹவுசி பிரபு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் வழக்கு குறித்து விஜய் சேதுபதி பட நிறுவனம், தெலுங்கில் படத்தை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ், இயக்குனர் புஜ்ஜி பாபு சனா,  இயக்குனர் சுகுமார், உதவி இயக்குனர் சம்பத் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

- முகேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com