ஜனநாயகன் | ’படத்திற்கு சான்று வழங்கும் இறுதிமுடிவு எடுக்கவில்லை..’ - தணிக்கை வாரியம் வாதம்
விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான தணிக்கை சான்று வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பட வழக்கில் இன்றே தீர்ப்பு வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்..
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது.
படத்தை மறு ஆய்வு செய்ய கோரிய தணிக்கை வாரியத்தின் உத்தரவிற்கு தனி நீதிபதி தடை விதித்திருந்த நிலையில், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை டிவிசன் பெஞ்ச், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது.
இதனை எதிர்த்து படத் தயாரிப்புநிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியசூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதன்படி, சென்னை டிவிசன் பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து, படத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் அமர்வில் இன்று விசாரணைக்கு வருவதாக சொல்லப்பட்டது.
சான்று வழங்கும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை..
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று குறித்த வழக்கு நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் தங்களுடைய வாதத்தை வைத்து வருகிறது.
தணிக்கை வாரியம் தரப்பில், ‘ஜனநாயகன் திரைப்படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட தகவல் ஜனவரி 5 ஆம் தேதியே தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை நிராகரித்து பதிலளிப்பதற்கு முன்பாகவே நேரடியாக தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் சென்றது. மேலும் எங்களுடைய பதில் மனுவை கேட்காமலேயே படத்திற்கு தணிக்கை வழங்கவேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்’ என கூறப்பட்டது.
அப்போது படத்தை மண்டல தணிக்கை வாரிய அதிகாரி பார்த்தாரா? படத்திற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் யாருடையது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தணிக்கை வாரியம், படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்துள்ளது. மண்டல தணிக்கை வாரிய அதிகாரி படத்தைப் பார்க்கவில்லை, தணிக்கை குழுவால் மட்டுமே பார்க்கப்பட்டது. படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும். மண்டல அலுவலகத்தில் உள்ள ஆய்வு குழுவின் முடிவுகள், மத்திய தணிக்கை வாரியத்தை கட்டுப்படுத்தாது’ என தெரிவிக்கப்பட்டது.
மேலும், படத்திற்கு தணிக்கை சான்று வழங்கும் இறுதிமுடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும், 500 கோடி செலவில் படம் எடுக்கப்பட்டதாக கூறி உடனே நிவாரணம் கோர முடியாது எனவும் தணிக்கை வாரியம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவில் இன்றே வழக்கின் உத்தரவு பிறப்பிக்கபட வேண்டும் என்று கூறியிருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடந்துவருகிறது.

