43 வயது பெண்ணை அச்சுறுத்தி சமூக ஊடகங்களில் அவரை குறித்து அவதூறாக பதிவிட்டதாக பாலிவுட் நடிகர் சாஹில் கான் மற்றும் ஒரு பெண் மீது மும்பை போலீசார் முதற்கட்ட வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், மும்பையின் புறநகர் ஓஷிவாராவில் வசிக்கும் 43 வயது பெண்ணுக்கு ஜிம்மில் ஒரு பெண்ணுடன் பண விஷயத்தில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணும், நடிகர் சாஹில் கானும் தன்னை தகாத முறையில் திட்டி அச்சுறுத்தியதாக அப்பெண் குறிப்பிட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகளை இட்டுள்ளதாக அப்பெண் கூறியுள்ளதை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் அடிப்படையில் நடிகர் சாஹில் கான் மற்றும் மற்றொரு பெண் மீது அவதூறு, மிரட்டல் மற்றும் பெண்ணை அவமதித்தல் ஆகிய இந்திய சட்டப்பிரிவுகளின் கீழ் ஓஷிவாரா காவல் நிலையத்தில் முதற்கட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் புகாரளித்த பெண்ணின் கணவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதனால் அப்பெண் தனது கணவர் மீதும் புகாரளித்துள்ளதாகவும் அதிகாரி கூறியிருக்கிறார்.
ஸ்டைல், எக்ஸ்யூஸ் மி, ஆலாதின் அண்ட் ரமா: தி சேவியர் போன்ற படங்களில் சாஹில் கான் நடித்துள்ளார்.