’ஜேம்ஸ்பாண்ட் 25’-க்கு புது இயக்குனர் கிடைச்சாச்சு!
ஜேம்ஸ்பாண்ட் படங்களின் 25-வது பாகத்துக்கு புதிய இயக்குனரை ஒப்பந்தம் செய்துள்ளது பட நிறுவனம்.
ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது. இயான் ஃபிளமிங்க் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட, பாண்ட் கேரக்டர் படங்கள், வசூலிலும் சாதனை படைக்கிறது. பாண்ட் பட வரிசையின் 25 வது படம், டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்கான முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன.
தொடர்ந்து நான்கு படங்களில் ஜேம்ஸ்பாண்ட்-ஆக நடித்த டேனியல் கிரேக் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக முதலில் செய்தி வெளியா னது. அவருக்குப் பதிலாக கறுப்பினத்தைச் சேர்ந்த இட்ரிஸ் எல்பா நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் டேனியல் கிரேக் மீண்டும் நடிக்கிறார். ’ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தை இயக்கிய டேனி பாய்ல் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்த வந்த நிலையில் படத்தில் இருந்து இயக்குனர் பாய்ல் வெளியேறிவிட்டார்.
படத்தின் கிளைமாக்ஸில் ஹீரோ இறந்துவிடுவது போல காட்சியை வைக்கச் சொன்னார்களாம் ஹீரோ டேனியல் கிரேக்கும் தயாரிப்பாளர் பார்பரா புரோக்கோலியும். ஏனென்றால் கிரேக்குக்கு இதுதான் கடைசி பாண்ட் படம் எனக் கூறப்படுகிறது. ’ஜேம்ஸ் பாண்ட்டை, கிளைமாக்ஸில் சாகடிப்பது கேலிக்குரியது, இப்படியொரு ஐடியாவே தவறான ஒன்று’ என்று கூறிய பாய்ல் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
(டேனி பாய்ல்)
இதையடுத்து கேரி புகுனகா (Cary Fukunaga) இயக்குகிறார். இவர் ஏற்கனவே விக்டோரியா பாரா சைனோ, சின் நோம்ப்ரே, ஜானே ஐரே, பீட்ஸ் ஆப் நோ நேஷன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை, டிசம்பரில் தொடங்கி 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இயக்குனர் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்குகிறது. 2020 பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.