அப்போது அவரிடம் பல விஷயங்கள் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு மிக உற்சாகமாகப் பதிலளித்தார் நடிகர் கமல்ஹாசன். வணிக சினிமா குறித்து உரையாடலின் போது அவர், “சகலகலா வல்லவன் படத்தை எல்லோரும் திட்டினார்கள். பாலுமகேந்திரா திட்டினார். நானும் சேர்ந்து திட்டினேன். ஏனெனில் நண்பர்கள் எல்லோரும் இப்படித் திட்டுகிறார்களே என அவமானமாகப் போய்விட்டது. பிறகு யோசித்துப் பார்த்தேன். அந்த வழியை நான் தொடவில்லை என்றால், ராஜ் கமல் நிறுவனத்தையே ஆரம்பித்திருக்க முடியாது.
இது டிக்கெட் போட்டுச் செய்கிற வியாபாரம் தானே. தர்மத்திற்கு நான் பாடும் பாட்டில்லையே? தியாகராஜர் எப்படி ராமனைப் போற்றி தஞ்சாவூர் வீதியில் பிச்சை எடுத்துப் பாடினாரோ அப்படிப்பட்ட கலையில்லையே? எனக்கு கார் வாங்க வேண்டும் என்று ஆசை. டிக்கெட் விற்க வேண்டும் என்று ஆசை. எம்.ஜி.ஆர். மாதிரி, சிவாஜி மாதிரி ஆகவேண்டும் என்று ஆசை. பிறகு மக்களை மகிழ்விக்கமாட்டேன் என்று என்ன வீம்பு? அவர்களுக்கு என் கலை புரியவில்லை என்றால் அவர்களை அங்குக் கொண்டுவர வேண்டுமே தவிர, நான் போய் தனியாகக் காட்டி மகரிஷியாக உட்கார்ந்து கொள்ள முடியாது” எனப் பேசியிருந்தார்.