துரந்தர் 2 | ”கடைசி ஃபிரேம் வரை.. முதல் பாகத்தை விஞ்சிவிட்டது” - ராஜமௌலி பாராட்டு!
ராஜமௌலி 'துரந்தர் தி ரிவென்ஞ்' படத்தை பாராட்டி, அதன் பிரம்மாண்டம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதை திருப்பங்கள் பார்வையாளர்களை கட்டிப் போடுவதாக கூறினார். 4 மணி நேர நீளமுள்ள படத்தை வெளியிட தைரியம் தேவை எனவும், இயக்குநர் ஆதித்யா தர் பிரமாதமாக செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் `துரந்தர்'. ஸ்பை த்ரில்லர் படமாக உருவான இப்படம் உலகளவில், ரூ.1300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமான `துரந்தர் தி ரிவென்ஞ்' மார்ச் 19 வெளியானது. முதல் பாகம் போலவே இந்த பாகத்திற்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் முதல் நாள் இந்திய வசூல் 173 கோடி எனவும் உலக அளவில் 247 கோடி எனவும் சொல்லப்படுகிறது.
இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இப்படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் "எனக்கு 'துரந்தர்-1' மிகவும் பிடித்திருந்தது, ஆனால் 'தி ரிவெஞ்ச்' அதன் பிரம்மாண்டத்திலும் ஆன்மாவிலும் முதல் பாகத்தை விஞ்சிவிட்டது. கதை, நடிகர்கள் தேர்வு, தொழில்நுட்பம், இசை, கதை நிகழும் உலகை வடிவமைத்தது மற்றும் இயக்கம் ஆகிய எல்லாமே சிறப்பு. ஆனால், அதிலுள்ள உணர்ச்சிப்பூர்வமான அழுத்தங்கள்தான் இப்படத்தை உண்மையிலேயே நிலைநிறுத்துகின்றன. உணர்ச்சிகள் நிறைந்த உண்மையான பதற்றத்தை உருவாக்கும் கதைத் திருப்பங்களை நேர்த்தியாகப் பின்னுகிறது எழுத்து. ஆதித்யா தர், நீங்கள் பிரமாதமாகச் செய்துள்ளீர்கள். 4 மணி நேர நீளமுள்ள ஒரு திரைப்படத்தை உருவாக்கி வெளியிடுவதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். கடைசி ஃபிரேம் வரை பார்வையாளர்கள் இருக்கையில் கட்டிப் போடப்படுகிறார்கள்.
ரன்வீர் சிங் என்னவொரு நடிப்பு, சகோதரியுடன் வரும் ஒரு காட்சி, உங்கள் நடிப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அந்த ஆரம்பம் முதல் மனதை உருக்கும் உச்சக்கட்டம் வரை, ஹம்ஸாவாகவும் ஜஸ்கிரத்தாகவும் எங்களை மெய்மறக்கச் செய்துவிட்டீர்கள். மாதவன் அவர்களே, ஒரு தேசத்தின் கையறுநிலையையும் விரக்தியையும் நீங்கள் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியதால், உங்கள் வெற்றியை நாங்கள் எங்களுடையதாகவே உணர்ந்தோம். இந்த மகத்தான வெற்றிக்காக முழு குழுவுக்கும் வாழ்த்துக்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

