"இந்தியில் நல்ல படங்கள் அமைவதில்லையா?" - மிருணாள் தாக்கூர் சொன்ன பதில் | Mrunal Thakur
பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர். தெலுங்கில் `Sita Ramam' மூலம் அறிமுகமாகி இப்போது தெலுங்குப் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இப்போது இவர் அதிவி ஷேஷ் உடன் இணைந்து தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகியுள்ள `Dacoit' ஏப்ரல் 10 வெளியாகவுள்ளது. இதற்கான பேட்டி ஒன்றில், ’’உங்களுக்கு அதிகமாக இந்தியைவிட தெலுங்கு மொழியில் தான் சிறந்த பாத்திரங்கள் கிடைப்பதாக சொல்லப்படுகிறதே’’ எனக் கேட்க அதற்குப் பதில் சொல்லி இருக்கிறார்.
மிருணாள் இதுகுறித்து சொல்லும்போது, "நான் படிப்படியாக ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறேன். முன்பு நான் தயாராக இல்லை. மேலும் என்னை நம்பி நல்ல கதாபாத்திரங்களைக் கொடுக்கும் இயக்குநர்களுக்கு நன்றியோடு இருக்கிறேன். இயக்குநர்களும் ’இந்த ஸ்கிரிப்ட்டை உங்களை மனதில் வைத்து எழுதியிருக்கிறேன்’ எனச் சொல்கிறார்கள். இப்படிச் சொல்வதெல்லாம் எனக்கு மிகப்பெரிய விருது. இதற்கு மேல் என்னால் ஒன்றும் கேட்க முடியாது. நிறைய பேர் இந்தியில் உங்களுக்குப் பெரிய வாய்ப்பு அமைவதில்லை, தெலுங்கில் கிடைக்கிறது எனக் கேட்பார்கள்.
ஆனால் முதல் தெலுங்குப் படமான 'சீதா ராமம்' திரைப்படம் பிளாக்பஸ்டராகி, தென்னிந்திய சினிமாவில் எனக்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகுதான் அனைவரும் என்னை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வளர்ந்தேன். மேலும் என்னை ஒரு தெலுங்கு நபராக நினைக்கும் அளவுக்கு அந்தப் பாத்திரம் இருந்திருக்கிறது.
மராத்தி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது நான் மராத்தியில் பேசுவதைப் பார்த்து, `எவ்வளவு அழகாக மராத்தி பேசுகிறீர்கள்' என்றார்கள். நான் மராத்தி பெண்தான் எனச் சொன்னேன். ஒரே ஒரு படம் உங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்று தந்துவிடும். அது, எனக்கு ’சீதா ராமம்’ ஆக இருந்தது. எனவே நான் இந்தி இயக்குநர்களை குறை சொல்லமாட்டேன். நான் அப்போது தயாராக இல்லை, இப்போது தயாராக இருக்கிறேன்" என்றார்.

