ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? என்று முதல்வர் பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த டிசம்பர் 13 ஆம் தேதியிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் இருந்து துவக்கிய கமல்ஹாசன் தொடர்ச்சியாக அதிமுகவை விமர்சித்து வருவதோடு எம்.ஜி.ஆரின் வாரிசு என்றெல்லாம் பேசியது சர்ச்சயை ஏற்படுத்தியது. அதற்கு அதிமுகவினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பம் கூட நல்லா இருக்காது. நல்லா இருக்கிற குடும்பத்தைக் கெடுப்பதுதான் அவர் வேலை. அந்தத் தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டுப்போகும், நல்லா இருக்கும் குடும்பமும் கெட்டுப்போய்விடும்" என்று விமர்சித்ததற்கு "முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித்துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? நான் கேட்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு, விருதுநகரில் அரசு ஒப்பந்ததாரரான செய்யாத்துரைக்கு சொந்தமான நிறுவனங்களில் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனையில் கணக்கில் வராத 170 கோடி ரூபாய் பணமும், 105 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டது. ’ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அவரது உறவினர்களுக்கும் தொடர்பு உள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுங்கள்’ என்றுக்கூறி எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கோரிக்கையும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.