பிக்பாஸில் என்னை வில்லியாக்கிவிட்டார்கள்: காயத்ரி
பிக்பாஸ் புரமோவில் என்னை வில்லியாக சித்தரித்துவிட்டார்கள் என்று நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் சொன்னார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் காயத்ரி ரகுராம். இதில் அவர் பேசிய ’சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது. அதோடு பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியாவிடம் மோசமாக நடந்துகொண்டார் என்றும் கூறப்பட்டது.
இதுபற்றி காயத்ரி கூறும்போது, ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது அட்வெஞ்சர் மாதிரி இருந்தது. சில புதியவர்களுடன் நேரத்தை செலவிட்டது ஜாலியாக இருந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சியின் புரமோவில் என்னை வில்லியாக சித்தரித்துவிட்டார்கள். எங்களின் இன்னொரு பக்கத்தை பார்வையாளர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஓவியாவை நான் தொந்தரவு செய்ததாகக் கூறுவது தவறு. முகம் தெரியாதவர்களுடன் ஒரே வீட்டில் வசிக்கும்போது, கருத்துவேறுபாடுகள் வருவது சகஜம். அதேபோலதான் புதிதாக சிலரிடம் பழகும்போதும். சிலருடன் ஒட்டிக்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். எனக்கு யாரையும் காயப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமில்லை. ஒரு கட்டத்தில் ஓவியாவுக்கு உதவி தேவைப்பட்டதை உணர்ந்தோம். அவர் அங்கு சவுகரியமாக இல்லை என்பதை யாரிடமாவது தெரிவித்திருக்க வேண்டும். இப்போது அங்கிருந்து வெளிவந்தாகிவிட்டது. அங்கிருந்தவர்கள் எல்லோரிடமும் நட்பாகவே இருக்கிறேன். ஆரவ் வெற்றிபெற்றிருக்கிறார். அவர் அந்த வெற்றிக்கு தகுதியானவர்தான்’ என்றார்.