சர்ச்சைகள்.. புகார்கள்.. எதிர்பாராத நிகழ்வுகளுடன் நிறைவடைந்த பிக்பாஸ்..!

சர்ச்சைகள்.. புகார்கள்.. எதிர்பாராத நிகழ்வுகளுடன் நிறைவடைந்த பிக்பாஸ்..!
சர்ச்சைகள்.. புகார்கள்.. எதிர்பாராத நிகழ்வுகளுடன் நிறைவடைந்த பிக்பாஸ்..!

தனியார் தொலைக்காட்சியில் ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில், மலேசியாவைச் சேர்ந்த முகின் ராவ் வெற்றி பெற்றுள்ளார்.

எவ்வித வெளி உலக தொ‌டர்பும் இல்லாத ஒரு வீட்டில், 100 நாள்கள் தங்க வே‌‌ண்டும் என்ற நிபந்‌தனையுடன் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் 23-ஆம் தேதி தொடங்கியது. மக்கள்‌ நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குநர் சாண்டி, திரைப்பட இயக்குநர் சேரன், செய்தி வாசிப்பளர்கள் பாத்திமா பாபு, லாஸ்லியா, நடிகர்கள் சரவணன், கவின், தர்ஷன், நடிகைகள் அபிராமி, வனிதா, மீரா, ஷெரின், ரேஷ்மா, மதுமிதா மற்றும் இசைக் கலைஞர் மோகன் வைத்யா என 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

3-ஆவது ஆண்டாக நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்சியில் பல எதிர்பாராத நிகழ்வுகளும் அரங்கேறின. பெண்களை இடிப்பதற்காகவே இளம் வயதில் பேருந்தில் சென்றதாக கூறிய நடிகர் சரவணன் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். சரவணன் சர்சையை தொடர்ந்து, நடிகை மதுமிதா செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக,‌ கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி‌த்த மதுமிதா நிகழ்ச்சியிலிருந்து‌ வெளியேற்றப்பட்டார். சரவணன், மதுமிதா ஆகியோர் சர்ச்சையால் வெளியேறிய நிலையில் மற்றப்போட்டியாளர்கள் வழக்கம் போல் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்பட்டார்கள்.

முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்ட கவின், நண்பர்களுக்கு வழிவிடுவதாகக் கூறி 5 லட்சம் ரூபாயு‌டன் ‌வெளியேறியது பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. நிகழ்சியில் இருந்த 14 வாரத்தில், 12 வாரம் வெளியேற்றப்படுபவர்களுக்கான பட்டியலில் இடம்பிடித்தார் கவின். ஆனால் அவரை மக்கள் அதிகப்படியான வாக்குகள் அளித்து நிகழ்ச்சியில் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கியிருந்தனர். கவினை போலவே ரசிகர்களிடம் அதிக செல்வாக்கு பெற்ற போட்டியாளராக வலம் வந்த தர்ஷனும் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

16 பேரில் லாஸ்லியா, சாண்டி, முகின், ஷெரின் ஆகிய நான்கு பேர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர். அதில் குறைவான வாக்குகளை பெற்ற ஷெரின் பிக்பாஸ் நிகழ்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் மீதமுள்ள மூவரில் யார் முதல் இடத்தை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதில் முகின் ராவ் முதலிடம் பிடித்த நிலையில், சாண்டிக்கு 2-வது இடமும், லாஸ்லியாவுக்கு 3-வது இடமும் கிடைத்தது. வெற்றி பெற்ற முகினுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுடன் கோப்பையும் வழங்கப்பட்டது. இதுதவிர சேரனுக்கு ஒழுக்கத்திற்கான விருதும், ஷெரினுக்கு நண்பருக்கான விருதும், தர்ஷனுக்கு ஆல்ரவுண்டர் விருதும், கவினுக்கு கேம் சேன்ஞ்சர் விருதும் வழங்கப்பட்டது.

ஆல்ரவுண்டர் விருதை பெற்ற தர்ஷனுக்கு, தன்னுடைய ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கியுள்ளார் கமல்ஹாசன். அதேபோல் கவினும் வேறு ஒரு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com