ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப் போட்டி: பாரதிராஜாவும் களத்தில் குதித்தார்!

ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப் போட்டி: பாரதிராஜாவும் களத்தில் குதித்தார்!

ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப் போட்டி: பாரதிராஜாவும் களத்தில் குதித்தார்!
Published on

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை படமாக்க போட்டி நிலவுகிறது. இயக்குனர் விஜய், பிரியதர்ஷினி ஆகியோரை அடுத்து பாரதிராஜாவும் களத்தில் குதித்துள்ளார்.

பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று சினிமாக்களை எடுப்பது இப்போதைய டிரென்ட். சினிமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இப்போது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகிறது. அவரது வாழ்க்கை கதையை மூன்று பேர் இயக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

முதலில் விஜய் இயக்க இருப்பதாக அறிவிப்பு வந்தது. தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்தப் படத்தை விப்ரி மீடியா சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரிக்கிறார். இவர்தான் தென்னிந்திய மொழிகளுக்கு வெளிநாட்டில் விருது வழங்கும் ’சைமா’ விழா வை நடத்தி வருகிறார். மேலும், 83 ஆம், ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து, ’83 world cup’, ஆந்திர முன்னாள் முதல்வரும் நடிகருமான ’என்டி ராமராவ்’ சுயசரிதை ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அன்றைய தினமே படத்தின் முதல் தோற்றம் வெளியாகும் என்றும் தெரிவித்து உள்ளனர். 

ஜெயலலிதாவாக நடிக்க முன்னணி நடிகைகள் சிலர் போட்டி போடுகின்றனர். நடிகை த்ரிஷா, ‘ஜெயலலிதாவாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவில் அதில் நடிக்க ஆவலாக இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார். நடிகை மஞ்சிமா மோகனும் ஜெயலலிதாவாக நடிக்க ஆர்வமாக இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.இவர்கள் தவிர நயன்தாரா, ஜோதிகா ஆகியோரில் ஒருவரை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது. 

இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனரான பிரியதர்ஷினியும் அறிவித்துள்ளார். இவர் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது வரலட்சுமி நடிக்கும் ’சக்தி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 
அவர் கூறும்போது, ‘ஜெயலலிதா ஓர் இரும்பு பெண்மணி. அவரது வாழ்க்கை பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்று முடிவெடுத்து 4 மாதங்களுக்கு முன்பிருந்தே திரைக்கதையை உருவாக்கி வருகிறேன். நடிகர் தேர்வும் நடக்கிறது. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் முன்னணி கதாநாயகி நடிக்கிறார்’ என்று தெரிவித்துள்ளார். 

(பாரதிராஜாவுடன் ஆதித்யா பரத்வாஜ்)

இந்நிலையில் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை கதையை படமாக்குகிறார். இதை மும்பையை சேர்ந்த ஆதித்யா பரத்வாஜ் தயாரிக்கிறார். இவர் ஒய்-ஸ்டார் சினி மற்றும் டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

இதுபற்றி ஆதித்யா பரத்வாஜ் கூறும்போது, ’இந்தப் படத்தை இயக்குவது உறுதியாகி இருக்கிறது. படத்துக்கு தற்காலிகமாக, புரட்சித் தலைவி’ என்று டைட்டில் வைத்திருக்கிறோம். சிலர் ’அம்மா’ என்பதை இதோடு சேர்க்குமாறு கூறியுள்ளனர். இசையமைக்க இளையராஜாவிடம் பேசியிருக்கிறோம். படத்தின் கதை உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் ரெடியாக இருக்கின்றன. எல்லாம் சரியாக நடந்தால் டிசம்பரில் படத்தை தொடங்க இருக்கிறோம். படத்தில் சசிகலா, எம்.ஜி.ஆர் கேரக்டர்களும் வருகிறது. எம்.ஜி.ஆராக நடிக்க கமல்ஹாசன் மற்றும் மோகன்லாலிடம் பேசி வருகிறோம். இன்னும் முடிவாகவில்லை’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com