விதிகளை மீறியதாக நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் நீக்கம்

விதிகளை மீறியதாக நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் நீக்கம்
விதிகளை மீறியதாக நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் நீக்கம்

 நடிகர் சங்க விதிகளை மீறியதாக நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் மற்றும் உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. அதில், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலை நடத்தக் கூடாது என பல குழப்பங்கள் அந்த நேரத்தில் நிலவியது. இருந்தாலும் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதையடுத்து அந்த தேர்தலில் பாதிவான வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனால் இரண்டரை ஆண்டுகள் வாக்குகள் எண்ணப்படாமல் இருந்தன. இந்த நிலையில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி நடிகர் சங்கத்தின் வாக்குகள் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி எண்ணப்பட்டன. அதில் நாசர் தலைமையிலான அணி வெற்றிபெற்றது. இதையடுத்து நாசர் விஷால், கார்த்தி உள்ளிட்ட பாண்டவர் அணியினர் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்கத்தின் சார்பில் கே.பாக்யராஜ்க்கு Show Cause நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் பற்றி பொய்யான, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருவதாகவும் சங்க உறுப்பினர்கள் சிலர் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளனர். இது குறித்து செயற்குழுவில் முடிவெடுத்து சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் உங்களை சங்கத்திலிருந்து ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படுகிறது. 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என சங்கத்தின் சார்பாக ஆகஸ்ட் 22 ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது. கூடவே நடிகர் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.உதயாவிற்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.

தென்னிந்திய சங்க விதி 13-ன் படி சங்கத்திற்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் செய்தி வாயிலாகவோ அல்லது உறுப்பினர்களுக்கு கடிதம் வாயிலாகவோ கருத்து சொல்லக் கூடாது என விதி உள்ளது. இதன் காரணமாக தான் தற்போது பாக்யராஜ், உதயா இருவரையும் ஆறு மாத காலத்திற்கு சங்கத்திலிருந்து நீக்கியுள்ளனர்.

.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com