”இதுவரை நான் செய்யாத ஒன்றை முயற்சிக்கிறேன்” - நடிகர் பாசில் ஜோசப் அறிவிப்பு | Basil Joseph
`ஃபேலிமி', `நுனக்குழி', `பொன்மான்', 'மரணமாஸ்' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து பெரிய வரவேற்பை பெற்ற பாசில், சிவகார்த்திகேயனின் `பராசக்தி' படம் மூலம் தமிழ் சினிமாவிலும் நடிகராக அறிமுகமாகிறார்.
மலையாளத் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் பாசில் ஜோசப். `குஞ்சிராமாயணம்', `கோதா', `மின்னல் முரளி' படங்கள் மூலமாக இயக்குநராகவும் சாதித்தார். ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் தற்போது `ஃபேலிமி', `நுனக்குழி', `பொன்மான்', 'மரணமாஸ்' போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்து பெரிய வரவேற்பைப் பெற்றார். சிவகார்த்திகேயனின் `பராசக்தி' படம் மூலம் தமிழ் சினிமாவிலும் நடிகராக அறிமுகமாகிறார். நடிகராக, இயக்குநராக வென்றவர் இப்போது படத் தயாரிப்பில் களம் இறங்குகிறார்.
அவருடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு, ’பாசில் ஜோசஃப் என்டர்டெயின்மென்ட்’ எனப் பெயரிட்டிருக்கிறார். இதுபற்றி அவரது சமூக வலைதளத்தில் அறிவித்தவர், "இதுவரை நான் செய்யாத ஒன்றை முயற்சிக்கிறேன் - ஆம், திரைப்படத் தயாரிப்பிற்குள் வருகிறேன். நான் கதைகளை மிகவும் சிறப்பாக, தைரியமாக, புதிய வழிகளில் சொல்ல விரும்புகிறேன். இந்தப் புதிய பாதை நம்மை எங்கு கொண்டு செல்கிறது என்பதைப் பார்ப்போம். பாசில் ஜோசஃப் என்டர்டெயின்மென்ட்டுக்கு வரவேற்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் முதல் படத்தை அருண் அனிருத்தன் இயக்குவார் எனவும், இப்படத்தில் டொவினோ தாமஸ் வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் பேசில் ஆகியோர் நடிப்பதாவும் சொல்லப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாம்.