இந்துசர்கார் படத்திற்கு எதிர்ப்பு: படக்குழுவினர் ஹோட்டலில் சிறை வைப்பு!
மதுர் பாண்டர்கர் இயக்கியுள்ள ’இந்துசர்கார்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை புனேவில் ப்ரமோசன் செய்யச் சென்ற படக்குழுவினர் விரட்டப்பட்டுள்ளனர்.
சாந்தினி பார், பேஜ் 3, டிராபி சிக்னல் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி பல தேசிய விருதுகளை வாங்கிய இயக்குநர் மதுர் பண்டார்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்து சர்கார் படம் இந்திராகாந்தி பிரதமராக இருக்கும்போது அவரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவச ரநிலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்திராகாந்தி, அவரின் மகன் சஞ்சய் காந்தி உள்ளிட்ட கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படம் திரையிடப்படும் அனைத்து திரையரங்குகளுக்கு முன்பும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இப்படம் வரும் 28ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இந்து சர்கார் படம் பற்றிய அறிமுக விழா புனேவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற இருந்தது. அங்கு ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். நிகழ்ச்சி நடைபெற்ற சில நிமிடங்களில் அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் இந்து சர்கார் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து இயக்குநர் மதுர் பண்டார்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், ’காங்கிரஸ் கட்சியினர் பட விழா நடந்த ஹோட்டலை முற்றுகையிட்டு கலவரத்தை ஏற்படுத்த முனைந்தனர். இதனால் நானும் எனது படக்குழுவினரும் பிணைக் கைதிகளைப் போன்று அந்த ஹோட்டலின் உள்ள ஒரு அறையில் அடைந்து கிடந்தோம். இதனால் பட விழா நிறுத்தப்பட்டது. அந்த ஹோட்டல் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நிரம்பி இருந்தனர். பிறகு ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் பாதுகாப்பில் நாங்கள் வெளியேறினோம்’ எனக் கூறி உள்ளார்.
அவரது மற்றொரு பதிவில், ‘ இந்து சர்கார் படத்தை வெளியிடுவதை தடுக்கும் காங்கிரஸ் கட்சியினரின் செயல் இப்படத்திற்கான பப்ளிசிட்டியை பிரம்மாண்டமாக உருவாக்கும்’ எனத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தில் 14 காட்சிகளை தணிக்கை குழுவினர் நீக்கக்கோருவதாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.