\
சமூக வலைதளங்களில் விமர்சனம்; அவதூறு வழக்கு தொடர முடிவு: ஆர்யாவின் வழக்கறிஞர்

சமூக வலைதளங்களில் விமர்சனம்; அவதூறு வழக்கு தொடர முடிவு: ஆர்யாவின் வழக்கறிஞர்

சமூக வலைதளங்களில் விமர்சனம்; அவதூறு வழக்கு தொடர முடிவு: ஆர்யாவின் வழக்கறிஞர்
Published on

ஆர்யா குறித்து சமூக வலைதளங்களில் தவறாக விமர்சனம் செய்தவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய முடிவு செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப் தெரிவித்தார்.

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண் ஒருவர் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னிடமிருந்து சுமார் 70 லட்சம் ரூபாய் பணம் பெற்று, திருமணம் செய்யாமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக சென்னை சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்து இருந்தார்.

நடிகர் ஆர்யா மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத் தரும்படி அவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நடிகர் ஆர்யாவிற்கும் இந்த வழக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது உறுதியானது. நடிகர் ஆர்யா பெயரில் போலி கணக்கு துவங்கி, ஆர்யாவை போல பேசி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று கோவை சாய்பாபா காலனியில் நடிகர் ஆர்யாவின் வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது “ ஆர்யா பெயரில் போலியான முகநூல் கணக்கு துவங்கி மோசடி செய்த நபர்கள் இருவரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த புகாருக்கும் நடிகர் ஆர்யாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. கைதான இருவரும் இதே மாதிரி பல்வேறு மோசடிகள் செய்து இருக்கின்றனர். பணபரிவர்த்தனை நடந்த வங்கி கணக்கு மூலமாக உண்மையான இரு குற்றவாளிகள் கைதாகியுள்ளனர். இவ்விவகாரத்தில் உண்மை நிலை தெரியும் முன்பாகவே நடிகர் ஆர்யா மீது மோசமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களிலும், யூடியுப்பிலும் முன் வைக்கப்பட்டது. ஆர்யா தலைமறைவாகி விட்டார், மும்பை ஓடி விட்டார் என பலவிதமாக சமூக வலைதளங்களில் தவறாக விமர்சனம் செய்தவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய இருக்கின்றோம்” என வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com